Rajendra Balaji's advice to AIADMK IT Wing executives
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக 2026 சட்டமன்ற தேர்தல் களப்பணிகள் குறித்தும், எஸ்.ஐ.ஆர் வாக்காளர் கணக்கீட்டு பணிகளில் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் திருத்தங்கல்லில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
அதில் அவர், “சமூக வலைத்தளங்களில் திமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு நீங்களும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அந்த பதிலடியானது அசிங்கமாக இருக்கக்கூடாது. மரியாதையான வார்த்தைகளால் பதிலடி கொடுங்கள். அதிமுக ஐடி விங் நிர்வாகிகளைவிட திமுக ஐடி விங் நிர்வாகிகள் சிறந்தவர்கள் கிடையாது. திமுக, காங்கிரஸ் ஐடி விங் நிர்வாகிகள் கூலிக்கு வேலை செய்து வருபவர்களாக இருக்கிறார்கள். உண்மைக்கும் லட்சியத்திற்கும் இயக்கத்திற்கும் மதிப்பளிக்கக்கூடிய உண்மையான தளபதிகள் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள்.
அடுத்து அமையப்போகின்ற ஆட்சி அதிமுக ஆட்சிதான். எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் முதல்வராக உறுதியாக வரப்போகிறார். அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமி மே 5- ஆம் தேதி கோட்டை கொத்தளத்தில் முதல்வராக பதவி ஏற்கப் போகிறார். சிறப்பாகப் பணியாற்றும் ஐடி விங் நிர்வாகிகளுக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் உரிய மரியாதை கிடைக்கும். பிரபாகரன் பிறந்தநாள் அன்று ஐடி விங் கூட்டத்தை நாம் நடத்தி உள்ளோம். செய் அல்லது செத்து மடி என்று போராடினார், ஈழத்துச் சிங்கம்பிரபாகரன். வங்கத்துச் சிங்கம் நேதாஜி போல் வரவேண்டும் என்ற எண்ண உணர்வோடு ஐடி விங் நிர்வாகிகள் பணியாற்றுங்கள். அரசியல் களத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் துணிச்சல் திமுகவிற்கு கிடையாது” என்றார்.
Follow Us