அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்!’ என மேற்கொண்டுள்ள பரப்புரை பயணத்தில் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய ஊர்களில் வழிநெடுகிலும் மக்களைச் சந்தித்தார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வீரவாள் கொடுத்தபோது “2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி பவனி வருவதற்கு இந்த வீர வாளை, வெற்றி வாளாக, போர் வாளாக வழங்குகிறேன்.” என்று பேச, எடப்பாடி பழனிச்சாமி “திமுக கூட்டணிக் கட்சிகள் அதிமுகவை அவதூறாக விமர்சித்தால், சிறப்பாகப் பேசக்கூடிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களுக்கு பதிலடி கொடுப்பார். பட்டாசுத் தொழிலுக்கு பிரச்சனை வந்தபோது அப்பொழுது அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜியின் கோரிக்கையை ஏற்று மூத்த வழக்கறிஞர்களை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பட்டாசு பிரச்சனையை தீர்த்தோம்.” எனக் கூறினார்.
மேலும், அங்கு பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களிடையே பேசிய எடப்பாடி பழனிச்சாமி “சட்டமன்றத் தேர்தல் வருவதால் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக விதிகளைத் தளர்த்தி 30 லட்சம் பேருக்கு கொடுக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். திமுக ஆட்சியாளர்கள் பெண்களின் கஷ்டத்தை அறிந்து விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுக்கவில்லை. தேர்தல் நெருங்குவதைக் கருத்தில்கொண்டுதான் இதைத் தெரிவித்திருக்கிறார்கள். அதுசரி, விடுபட்ட மகளிருக்கு ஏற்கனவே வழங்கவேண்டிய 52 மாதங்களுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படுமா? அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ள பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் திட்டத்தை தொடர்வோம். அதிமுகவில் தலைவர்கள் மறைந்தாலும் அவர்களது வழியிலேயே தொடர்ந்து செயல்படுவோம்.
காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த ஆட்சி தொடரவேண்டுமா? மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சியாளர்களுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும்.” என்று ஆதரவு திரட்டினார்.