சிவகாசியில் சௌந்தரபாண்டியனார் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
“அதிமுக கூட்டணி தேர்தல் வெற்றிக்கு வலு சேர்க்கும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பாதயாத்திரை செல்கிறார். அவருக்கு வாழ்த்துகள். ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைப்பு சம்பந்தமாக எந்தவொரு முடிவாக இருந்தாலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் எடுப்பார். அதிகாரம் கண்ணை மறைக்கின்ற வார்த்தைகளை விடுகின்ற இன்றைய திமுக தலைவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு பாடமாக, படிப்பினையாக அமையும்.
விஜயகாந்த் தேமுதிக ஆரம்பிக்கும் பொழுது மதுரையில் அவருக்குக் கூடிய கூட்டம் மிகப்பெரிய கூட்டம். விஜயகாந்த்துக்கு பக்குவப்பட்ட தொண்டர்கள் இருந்தார்கள். ஆனால், விஜய்க்கு பக்குவப்பட்ட தொண்டர்கள் இதுவரை உருவாகவில்லை. விஜய்க்கு என்று ஒரு கூட்டம் கூடுகிறது. ஆனால், அந்தக் கூட்டம் ஓட்டாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. விஜய்க்கு கூடும் கூட்டத்தைவிட தல அஜித் வந்தால் இரண்டு மடங்கு அதிகமாகக் கூட்டம் கூடும். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கூடாத கூட்டமா? ரஜினிக்கு இன்றும் அந்த மாஸ் இருக்கிறது. திரை நட்சத்திரங்கள் நேரில் எப்படி இருக்கிறார்கள் என்று நாங்களே பார்ப்போம். விஜய் தனித்து நின்று ஜெயிப்போம் என்று கூறினால், அவருடைய முயற்சி எல்லாம் வீணாகும்.
விஜய் பாஸ் மார்க் வாங்கவேண்டும் என்று சொன்னால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கின்ற அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால், இந்தத் தேர்தலோடு விஜய்யை தி.மு.க முடித்து விடும். விஜய் நன்றாக யோசித்து அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும். விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால், திமுக ஆட்சியைத் தூக்கி எறிவேன் என்று சொல்வது உண்மையாக இருந்தால், அதிமுக கூட்டணியை நாடி வரவேண்டும். அதுதான் விஜய்க்கு சரியான முடிவு.
விஜய் தனித்து நின்று களம் காண்போம் என்று கூறுவதை, திமுகவிற்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் தமிழக மக்கள் பார்ப்பார்கள். அந்த நேரத்தில் திமுகவிற்கு மாற்றாக அதிமுகவைத் தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். ஸ்டாலினுக்கு மாற்றாக எடப்பாடி பழனிச்சாமியைத் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்கள். இதுதான் தமிழக அரசியலில், 2026 சட்டமன்றத் தேர்தலலில் நடக்கப்போகிறது.” என்றார்.