சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்தார்.
இருப்பினும் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்ற காங்கிரஸ் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை வெளிப்படையாக எழுப்பி வருகின்றனர். இதற்கு திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். இதனால் கூட்டணிக்குள் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரப் பணிகள் உள்ளிட்டவைகளை பேசுவதற்கு திமுகவில் தற்போது வரை குழு அமைக்காததால் காங்கிரஸ் அதிருப்தி காட்டி வருகிறது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் உறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது.
இந்த நிலையில், ஆட்சியில் பங்கு கிடையாது என காங்கிரஸுக்கு மீண்டும் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மதுரை முனிச்சாலையில் திமுக சார்பில் இன்று (13-02-26) பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது, “காங்கிரஸுக்கு குடைச்சல் மாட்டோமா என்கிற எண்ணத்தில் பா.ஜ.ககாரன் இருக்கிறான். ஆனால் நாங்கள் காங்கிரஸிடம் நிலைமையை சொல்கிறோம். நாம் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைத்தால் தான் நல்லது என்று சொல்கிறோம். அவ்வளவு தான் சொல்கிறோமே தவிர கூட்டணி வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது. ஆட்சியில் பங்கு கிடையாது என்று முதல்வர் தெளிவாக சொல்லிவிட்டார். 93 இடம் தான் கலைஞர் வைத்திருந்தார், ஆனால் அப்போது ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை. அப்புறம் எப்படி இப்போது கொடுக்க முடியும். 150இல் இருந்து 160 தொகுதியில் உதயசூரியன் ஜெயிக்கும் நீங்கள் பாருங்கள். 170 தொகுதியில் நிப்போம், 150 தொகுதியில் இருந்து 160 தொகுதி வரை ஜெயிப்போம். உதயசூரியன் ஜெயிக்கும்” என்று கூறினார்.
Follow Us