தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் சூழலில் பரவலாக பல மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது.   ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழைபொழிந்து வருகிறது. ஈரோடு , கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 2.47 லட்சம் விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.26 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 7, 298 கன அடியாக நீர் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்காலுக்கு 1000 கன அடியும், பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 1,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  வறட்டுபள்ளம், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி வறட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.59 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 8.10 அடியாக உள்ளது. அதே நேரம் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 34.99 அடியாக உயர்ந்து உள்ளது.

Advertisment