Rain alert in 7 districts Photograph: (rain)
கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் அங்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்து வருகிறது. அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் மழை பொழிந்து வருகிறது. இன்று 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் வரத்து 50,000 கன அடியில் இருந்து 57,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கர்நாடகாவை ஒட்டியுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 57 ஆயிரம் கனஅடி என நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தடையானது இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பன்னிரண்டாயிரம் கனஅடி என இருந்த நீர்வரத்து தற்பொழுது 57,000 உடனடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக அணையில் இருந்து சுமார் 75 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.