'Rail fare hike to avoid impacting people' - Minister of State Somanna interview Photograph: (RAILWAY)
சென்னையிலிருந்து காஞ்சிபுரம் இடையிலான பல்வேறு ரயில்வே துறை சார்ந்த மேம்பாட்டு திட்டங்களை பார்வையிடுவதற்காக மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா நேற்று சென்னை வந்திருந்தார். நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து இன்று சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வரை நடக்கக்கூடிய பல்வேறு ரயில்வே மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்வதற்காக சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் 'இதுவரை ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை. இதற்கான ஆலோசனை மட்டுமே நடைபெற்று வருகிறது. ஆலோசனைகளுக்கு பிறகு பிரதமர் மோடி தான் இது குறித்து முடிவெடுப்பார்' என தெரிவித்திருந்தார்.
காஞ்சிபுரத்தில் நடத்திய ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் சோமண்ணா, 'காஞ்சிபுரத்தில் புதிதாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலைய பகுதியில் ரயில்வே நிலையம் அமைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதுகுறித்து விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. ரயில் கட்டணம் மக்களை பாதிக்காத வகையில் படிப்படியாக உயர்த்தப்படும்' என்றார்.
தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் மற்றும் ஏகாம்பரநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த சோமண்ணா, எமர்ஜென்சி குறித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டார்.