Rail connection failure - train service affected Photograph: (arakkonam)
அரக்கோணம் மார்க்கத்தில் தண்டவாள இணைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் விரைவு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் புளியமங்கலம் அருகே தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறால் அரக்கோணம் மார்க்கத்தில் சென்னை செல்ல வேண்டிய விரைவு ரயில்கள் அரக்கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூர், நீலகிரி எக்ஸ்பிரஸ், காவேரி விரைவு ரயில் ஆகியவை பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். அதேபோல் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தை சீர் செய்யும் பணிகளில் தொடர்ச்சியாக ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் திருவள்ளூர் பகுதியில் சரக்கு ரயிலில் டேங்கரில் இருந்த டீசல் பற்றி எரிந்த தீவிபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் ரயில் சேவை போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.