கர்நாடக மாநிலம் பெங்களூர் நாகவரா பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா என்ற இளம் பெண்ணும் இடையே கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து இந்த காதலுக்கு ராகுல் வீட்டில் சம்மதம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கீர்த்தனா வீட்டில் காதலுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் காரணமாகப் பெங்களூரிலிருந்து கடந்த 10ஆம் தேதி (புதன்கிழமை) நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணிக்குக் காதல் ஜோடியும் மற்றும் காதலனின் பெற்றோர் உள்ளிட்ட அவரது உறவினர்கள் 8 பேர் வந்துள்ளனர்.
அப்போது காதலர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து புதுமண தம்பதியர் மற்றும் அவரது குடும்பத்தினர் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து பெங்களூருவில் இருந்து மணப்பெண் கீர்த்தனாவின் குடும்பத்தினர் 15 பேர் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். அப்போது விடுதியில் தங்கி இருந்த ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கத்தியால் சரமாரியாகக் கொடூரமாக வெட்டியுள்ளனர்.மேலும் மணப்பெண் கீர்த்தனாவையும் தூக்கிச் செல்ல முற்பட்டனர்.
இதனைத் தடுக்க முயன்ற ராகுல் அவரது தந்தை டேனியல், மாமா பிரகாஷ் அம்மா கலையரசி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் நால்வருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து நால்வரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகையை அடுத்துள்ள உரத்தூர் மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் தப்பி ஓடியவர்கள் கடலூர் மாவாட்ட்டம் சேத்தியாதோப்பு அருகே போலீசார் மடக்கிப் பிடித்து வேளாங்கண்ணி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/12/arrest-2025-12-12-11-12-42.jpg)
இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மதம் மாறி திருமணம் செய்ததைப் பெண்ணின் குடும்பத்தார் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் மாப்பிள்ளை குடும்பத்தினரைத் தாக்கிவிட்டு பெண்ணை தூக்கிச் சென்றதாக பகீர் வாக்குமூலம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவத்திற்குக் காரணமான பெண்ணின் தாய், தந்தை, அவரது உறவினர்கள் வெங்கட் பிரபு, புனித்குமார், ராம், விஜய், ராகவ், கார்த்திக், மகேஸ்வரி, கவிதா உள்ளிட்ட பெண்ணின் குடும்பத்தினர் 9 பேரை வேளாங்கண்ணி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட 9 பேரும் கீழ்வேழூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வேளாங்கண்ணியில் மதம் மாறி திருமணம் செய்த பெங்களூரு காதல் ஜோடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us