தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கேரளா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதன்படி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், ‘புதுயுக யாத்திரை’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்த யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியாக திருவனந்தபுரத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்றார். அதில் அவர் சி.பி.எம் கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “சாதாரண சூழ்நிலைகளில் நரேந்திர மோடி இந்திய விவசாயி மற்றும் இந்திய தரவுகளை விற்க மாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பிரதமர் இந்த ஒப்பந்தத்தை செய்ததற்கான ஒரே காரணம், அவர் சமரசம் செய்யப்பட்டிருப்பதுதான். சுமார் 3.5 மில்லியன் எப்ஸ்டீன் கோப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அமெரிக்கா அந்த கோப்புகளை வெளியிடும் என்று பிரதமர் பயப்படுகிறார்.
பிரதமருக்கு நெருக்கமான அனில் அம்பானியின் பெயர் அந்த கோப்புகளில் உள்ளது. மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரியின் பெயர் உள்ளது. அமெரிக்க தரப்பில், அதானி மீது ஒரு கிரிமினல் வழக்கு உள்ளது. இதன் மூலம் பாஜகவின் நிதியும் அவரது நிதியும் இந்திய மக்களுக்கு தெரியவரும் என்று பிரதமர் பயப்படுகிறார். அதனால்தான் பிரதமர் பீதியடைந்து அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். கேரளாவின் ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மோடியால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தக் கேள்வியை நீங்கள் சி.பி.எம் தொண்டர்களிடம் கேட்டால், நான் சொல்வது சரி என்று அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை, எதிர்க்கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றன, ஆனால் கேரள முதல்வர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நான் புரிந்துகொள்ள விரும்புகிறேன்.
என் மீது 36 வழக்குகள் உள்ளன. மேலும் அமலாக்கத்துறை 55 மணி நேரம் தொடர்ந்து என்னை விசாரித்துள்ளது. கேரள முதல்வர் மீது அமலாக்கத்துறை, ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? காரணம், அவர்கள் ஒன்றாகச் செயல்படுகிறார்கள். கேரள சிபிஎம், பா.ஜ.க ஆகியவை கூட்டணியாக இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை தோற்கடிக்க ஒன்றாகச் செயல்படுகின்றன. இது விவசாயிகளுக்கும் சிறு வணிகர்களுக்கும் எதிரான ஒரு பெருநிறுவன அரசாங்கம். நீங்கள் சிபிஎம் கட்சித் தொண்டர்களிடம் கட்சியின் பெயரை சிபிஎம் இருந்து இந்திய பெருநிறுவனக் கட்சி என மாற்றச் சொல்லலாம்” என்று விமர்சித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/08/rahulcom-2026-03-08-17-52-40.jpg)