இந்திய நாடாளுமன்றத்தில் 2026-2027ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அதன் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, “அவையில் சுதந்திரமாக உரையாற்ற வாய்ப்பளிக்க வேண்டும். இந்த பொருளாதார ஆய்வறிக்கையைக் குறித்து சில முக்கிய கருத்துக்களை இங்கு அவசியம் உரையாற்ற வேண்டும். குறிப்பாக, இரண்டு அம்சங்களைக் குறித்து நான் பேச விரும்புகிறேன். எரிசக்தியையும் பொருளாதாரத்தையும் ஆயுதமாகப் பயன்படுத்தும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் நாட்டின் வலிமை என்ன என்பதை முதலில் நாம் உணர வேண்டும். நம் நாட்டில் உள்ள 140 கோடி மக்களே, நம் நாட்டின் வலிமை என்பதை நாம் உணர வேண்டும்.

Advertisment

முன்பு இருந்தது போன்ற உணவு தட்டுப்பாடுகள் தற்போது ஏதும் இல்லை. இருப்பினும், நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்காலத்தில் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. உலக நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. பல நாடுகளிடையே போர் ஏற்படும் சுழலும் நிலவுகிறது. அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவை அதிக அளவில் பயன்படுத்தும் காலமாக மாறிவிட்டது. இந்தியாவின் தரவுகள் அமெரிக்காவிற்கு அவசியம். தரவுகள் ஒரு நாட்டை வல்லரசாக மாற்றும். அமெரிக்க டாலரைக் காக்க இந்தியத் தரவுகள் தேவை. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவ தளபதியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைத்து விருந்து கொடுக்கிறார். அதையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் இருந்தது. நம் நாட்டு மக்களின் தரவுகள், உணவு உற்பத்தி செய்யும் முறை மற்றும் எரிசக்தித் துறை போன்றவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்.  

Advertisment

அமெரிக்க அதிபர் டிரம்புடன் இந்தியா பேச்சுவார்த்தை  நடத்திய போது, இந்திய மக்களின் தரவுகள் குறித்துப் பேசியிருக்க வேண்டும். அப்படி தரவுகளைப் பற்றிப் பேசியிருந்தால், அமெரிக்காவிற்கு இணையாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம். அப்படி ஏன் செய்யவில்லை?. அதே நேரத்தில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு, டாலர் மதிப்பு குறைவு மற்றும் சர்வதேச அளவில் நிகழும் பதற்ற நிலை போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல் வெறுமனே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.