Rahul Gandhi says The Prime Minister modi has sold our country to America
நாடாளுமன்ற இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது 2026-2027 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் (01-02-26) தேதி தாக்கல் செய்தார். இதனிடையே, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று (02-02-26) முதல் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சீனா ஊடுருவல் விவகாரம் குறித்து நேற்று மக்களவையில் பேச முயன்றார். அப்போது ஒன்றிய பா.ஜ.க எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பேச மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுல் காந்திக்கு மறுப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, இன்று மக்களவை கூடியதும் சீன ஊடுருவல் விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை வைத்தார். அதற்கு பா.ஜ.க எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இன்று மீண்டும் மீண்டும் அவை ஒத்தி வைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மக்களவை கூடியதும் ராகுல்காந்தி இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு தயாரானார். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவையை நடத்தி வரும் அவைத் தலைவர் விஷ்ணு பிரசாத், ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதிக்காமல் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்களை பேசுவதற்கு அழைப்பு விடுத்தார். இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்ட எம்.பிக்கள் ஆவணங்களைக் கிழித்து அவை தலைவர் மீது எறிந்தனர். இதனால் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பிக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி கலக்கமடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்த அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் நேற்று இரவு நரேந்திர மோடி கையெழுத்திட்டுள்ளார். அவர் மீது கடுமையான அழுத்தம் உள்ளது. நரேந்திர மோடியின் பிம்பம் சேதமடையக்கூடும். நமது பிரதமர் சமரசம் செய்துள்ளார். பொதுமக்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். வரலாற்றில் முதல் முறையாக குடியரசுத் தலைவரின் உரையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நரேந்திர மோடி சமரசம் செய்ததால், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் பொதுமக்களின் கடின உழைப்பை விற்றுள்ளார். அவர் நாட்டை விற்றுவிட்டார். நரேந்திர மோடியின் பிம்பத்தை வடிவமைத்தவர்கள் இப்போது இந்த பிம்பத்தை உடைப்பதால் அவர் பயப்படுகிறார். அமெரிக்காவில் அதானி மீது ஒரு வழக்கு உள்ளது, அது உண்மையில் மோடி மீதான வழக்கு. எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா வெளியிடாதவை இன்னும் உள்ளன. அதன் காரணமாகவும் அழுத்தம் உள்ளது. இவை இரண்டு அழுத்த புள்ளிகள். நாடு இதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
Follow Us