இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதிக்கப்படுவதாக நேற்று (30-07-25) மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.  இது குறித்து தனது தளமான ட்ரூத் சோசியலில் அவர் தெரிவித்ததாவது, ‘நினைவில் கொள்ளுங்கள், இந்தியா எங்கள் நண்பராக இருந்தாலும் பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தைச் செய்துள்ளோம். ஏனென்றால், அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளன. உலகிலேயே மிக உயர்ந்தவைகளில் ஒன்றாகும். மேலும் அவை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான மற்றும் அருவருப்பான நாணயமற்ற வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளன. அவர்கள் எப்போதும் தங்கள் ராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியுள்ளனர். மேலும் சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி வாங்குபவர்களில் ஒருவராக உள்ளனர். உக்ரைனில் நடக்கும் கொலைகளை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று எல்லோரும் விரும்பும் நேரத்தில் இது எல்லாம் நல்லதல்ல. எனவே, ஆகஸ்ட் 1 முதல் இந்தியா 25% வரி கட்டணத்தையும் அபராதத்தையும் செலுத்தும். இந்தியாவுடன் நமக்கு மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது’ எனப் பதிவிட்டிருந்தார். டொனால்ட் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கடந்த 3 நாட்களாக நடந்த ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தத்தின் டிரம்ப் பேச்சு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். ஆனால், பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் ஒருவர் கூட அதற்கு பதிலளிக்கவில்லை. உலக தலைவர்கள் யாரும் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தவில்லை என மக்களவையில் பிரதமர் மோடி ஆணித்தரமாக பேசிய அடுத்த நாளே, தனது வேண்டுகோளின் பேரில் இந்தியா பாகிஸ்தானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தது என டிரம்ப் 30வது முறை பேசி மீண்டும் பரப்பரப்பை கிளப்பினார். மேலும், இரு நாடுகளும் விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யாவிட்டால், இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு நடவடிக்கை நாளை (01-08-25) அமலுக்கு வரவுள்ள நிலையில், இந்தியாவை டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். தனது தளமான ட்ரூத் சோசியலில், ‘இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. இரு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது. இரு நாடுகளும் தங்களின் இறந்த பொருளாதாராத்தை ஒன்றாக கொண்டு வர முடியும். நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த வணிகத்தைச் செய்துள்ளோம். அவற்றின் கட்டணங்கள் மிக அதிகம், உலகிலேயே மிக உயர்ந்தவை. அதே போல், ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்து எந்த வணிகத்தையும் செய்யவில்லை. அதை அப்படியே வைத்திருப்போம்’ என்று கடுமையாக தாக்கியுள்ளார். இத்தகைய களேபரம் நடந்து வரும் நிலையில்ல் டிரம்ப் விதித்த அபராதத்துடன் கூடிய வரி விதிப்பு குறித்தோ, இந்தியாவை கடுமையாக விமர்சிப்பது குறித்தோ பிரதமர் நரேந்திர மோடி எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதி காத்து வருகிறார்.

இந்த நிலையில், இந்திய பொருளாதாரம் குறித்து டொனால்ட் டிரம்ப்பின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, “டிரம்ப் சொல்வது சரி தான். பிரதமர் மற்றும் நிதியமைச்சரை தவிர அனைவருக்கும் இது தெரியும். இந்திய பொருளாதாரம் ஒரு இறந்த பொருளாதாரம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த உண்மையை அதிபர் டிரம்ப் கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியப் பொருளாதாரம் ஒரு இறந்த பொருளாதாரம் என்பதை உலகம் முழுவதும் அறிந்திருக்கிறது. அதானிக்கு உதவுவதற்காக பா.ஜ.க பொருளாதாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பிரதமர் மோடி ஒரே ஒரு நபருக்காக மட்டும் தான் வேலை பார்க்கிறார், அது அதானிக்காக தான். இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நடைபெறும், டிரம்ப் சொல்வதை பிரதமர் மோடி சரியாகச் செய்வார். இன்று இந்தியாவின் முன் அமர்ந்திருக்கும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் அரசாங்கம் நமது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையை அழித்துவிட்டது. அவர்கள் இந்த நாட்டை தரையில் தள்ளிவிட்டுள்ளார்கள். முக்கிய கேள்வி என்னவென்றால், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தாக்குதலை நிறுத்தியதாக 30, 32 முறை டிரம்ப் கூறியுள்ளார். 5 இந்திய ஜெட் விமானங்கள் வீழ்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். டிரம்ப் இப்போது 25% வரிகளை விதிப்பதாகக் கூறுகிறார். பிரதமர் மோடி ஏன் பதில் அளிக்க முடியவில்லை?. உண்மையான காரனம் என்ன? அவரது கைகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

Advertisment