நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்ஜெட் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பேசுகையில் அமெரிக்கா - இந்தியா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து பேசினார். அதில், “பிரதமர் மோடி உட்பட எந்தவொரு இந்தியப் பிரதமரும், அவர் மீது ஒரு பலமான அழுத்தம் (chokehold) இல்லாதவரை இது போன்ற ஒரு ஒப்பந்தத்தில் (இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்) கையெழுத்திடுவார் என்று நான் நம்பவில்லை. நாம் வரிக் கொள்கைகளில் வளைந்து கொடுத்துவிட்டோம். நமது தரவுகளை (data) அவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம். 

Advertisment

டிஜிட்டல் வர்த்தக விதிகளின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டோம். தரவு உள்ளூர்மயமாக்கல் (data localisation) இல்லை. அமெரிக்காவிற்கு தடையற்ற தரவு பரிமாற்றம், டிஜிட்டல் வரியின் மீது கட்டுப்பாடு, மூலக் குறியீடு (source code) வெளிப்படுத்தத் தேவையில்லை மற்றும் 20 ஆண்டுகால வரி விடுமுறை என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிடம் உள்ள மற்றும் எப்போதும் இருக்கப்போகும் மிக மதிப்புமிக்க சொத்து தாரைவார்க்கப்பட்டுள்ளது. நமது விவசாயிகள் இயந்திரமயமாக்கப்பட்ட பிரம்மாண்டமான அமெரிக்கப் பண்ணைகளின் கட்டுப்பாட்டிற்கு விடப்பட்டுள்ளனர். நமது ஜவுளித் தொழில் முடக்கப்பட்டுள்ளது. இப்போது வங்கதேசம் நமது ஜவுளித் தொழிலை முற்றிலுமாக அழித்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நமது எரிசக்தி பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisment

நாம் யாரிடம் எண்ணெய் வாங்க விரும்புகிறோமோ அவர்களிடம் இருந்து இனி வாங்க முடியாது. எந்தவொரு இந்தியப் பிரதமரும் இப்படிச் செய்வார் என்று நான் நம்பவில்லை. இது ஒரு முழுமையான சரணாகதி. இது ஒரு பேரிடர், ஏனென்றால் இது வெறும் பிரதமருக்கான சரணாகதி மட்டுமல்ல. அவர் 150 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தையே தாரைவார்த்துவிட்டார். அமெரிக்காவில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பா.ஜ.க.வின் நிதி கட்டமைப்பைப் (financial architecture) பாதுகாப்பதற்காகவே அவர் நம் எதிர்காலத்தைச் சரணடைந்துள்ளார்” எனப் பேசினார்.