‘ஜனநாயகம் அழிக்கப்பட்டது’ - வாக்கு திருட்டு குறித்து இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு விளக்கமளித்த ராகுல் காந்தி!

indiarahul

Rahul Gandhi briefs India bloc leaders on election commission vote rigging at dinner meet

கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா தேர்தல், 2023இல் நடந்த கர்நாடகா தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களிலும் பா.ஜ.கவுக்காக ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வந்தது. இதனால், தேர்தல் ஆணையத்துக்கும் ராகுல் காந்திக்கும் இடையே வார்த்தை தொடர்பான மோதல் நடந்து வந்தது.

இந்த சூழ்நிலையில், பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்கான சான்றுகளை நேற்று (07-08-25) ராகுல் காந்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, “வாக்காளர் பட்டியலில் போலியான நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் பெரும் திருட்டு நடந்துள்ளது. மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 6.5 லட்சம் வாக்குகளில், 1 லட்சத்திற்கும் அதிகமாக வாக்கு திருட்டு நடந்துள்ளது. காங்கிரஸ் நடத்திய ஆய்வில் மகாதேவபுரா தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள், செல்லாத முகவரிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் கடும் போட்டி ஏற்பட்டது. 7தொகுதிகளில் 6 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் மகாதேவபுரா தொகுதியில் 1,14,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. 1,00,250 வாக்குகள் திருடப்பட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள் இருக்கின்றனர். 33,692 வாக்காளர்கள் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6ஐ தவறாக பயன்படுத்தியுள்ளனர்” என்று கூறி ஆதாரங்களோடு தரவுகளை வெளியிட்டார். மேலும் 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற 25 மக்களவைத் தொகுதிகளால் மட்டுமே பிரதமர் மோடி அந்த பதவியில் இருக்கிறார் என்றும், இது வெறும் தேர்தல் முறைகேடு மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான குற்றம் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி பகிர்ந்த வாக்காளர் பட்டியலின் விளக்கக்காட்சியில், ஒரே வாக்காளர் பல முறை இடம்பெற்றிருப்பதையும், பல மாநிலங்களில் ஒரே வாக்காளர் இருப்பதையும், வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி இல்லாமல் இருப்பதும், ஒரே முகவரில் ஏராளமான வாக்காளர்கள் இருப்பதும், வாக்காளர் அடையாளர் அட்டைகளில் அடையாளம் காண முடியாத அளவுக்கு மைரோசைஸ் செய்யப்பட்ட புகைப்படங்களும், முதல் முறையாக வாக்காளர்களுக்கான படிவம் 6இன் தவறாக பயன்படுத்திருப்பதையும் காண முடிந்தது. நாட்டில் முதன் முறையாக தேர்தல் ஆணையம் இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தரவுகளுடன் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்துக்கும் பா.ஜ.கவுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் வீட்டில் நேற்று (07-08-25) இரவு உணவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்,  14 மாதங்களுக்குப் பிறகு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள், எம்.பிக்கள் பங்கேற்றனர். சுமார் 50 இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை ‘ஜனநாயகம் அழிக்கப்பட்டது’ என்ற தலைப்பில் விளக்கக்காட்சியில் ஒளிபரப்பி இந்தியா கட்சித் தலைவர்களிடம் ராகுல் காந்தி விவரித்தார். 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றியை உருவாக்க தேர்தல் ஆணையம் பா.ஜ.கவுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் குற்றம் சாட்டினார்.

இந்தியா கூட்டணியைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் ஒன்றிணைத்த இந்த இரவு உணவு நிகழ்ச்சி என்பது, வரவிருக்கும் பீகார், தமிழ்நாடு போன்ற தேர்தல்களுக்கு வியூகம் அமைப்பதில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தல் ஆணையத்தை நோக்கி வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்தியா கூட்டணி நடத்தவிருக்கும் பேரணிக்கு அடிப்படையாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

election commision of india election commission INDIA alliance Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe