தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை எனத் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. 

Advertisment

அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சிகளான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையமும் எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட பணிகள் மூலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. 

Advertisment

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் கூட்டணி தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் பேசக் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவைக் காங்கிரஸ் கட்சி அமைத்தது. இந்த குழுவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா மற்றும் தமிழகச் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செ. ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

mks-congress-team

இதனையடுத்து இந்த குழுவினர் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி முதற்கட்டமாக சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சிக்குப் பலமாக  உள்ள சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணி தலைமையிடம் எவ்வளவு தொகுதிகளைக் கேட்பது, எந்தெந்த தொகுதிகளைக் கேட்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு ஒரு விருப்பப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த ஒருங்கிணைப்புக் குழு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை கடந்த 3ஆம் தேதி (03.12.2025) சந்தித்துப் பேசியிருந்தனர். 

Advertisment

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் வரும் ஜனவரி மாதம் பாத யாத்திரை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவரது பயணத் திட்டம் குறித்துத் திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதாவது காங்கிரஸ் கட்சி போட்டியிடும்  தொகுதிகள், மாநிலத்தில் சில முக்கியமான இடங்களில் பாதயாத்திரை நடத்துவதற்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது. 

rahul-sir-mic

அந்த வகையில் ராகுல் காந்தி பங்கேற்கும் பாதயாத்திரை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும், இதனை ஒருங்கிணைப்பதற்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்முன்னாள் மாநில தலைவர்களான கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசு, கே.வி. தங்கபாலு, கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ்  ரூபி மனோகரன் உள்ளிட்டோர்  இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

அதே போன்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் பிரியங்கா காந்தியும் மகளிர் பேரணியில் கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது தொடர்பான குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோதிமணி, சுதா ராமகிருஷ்ணன், ராணி, அஜினா சையத் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.