இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினருமான ரகுராம் ராஜனின் தந்தை ராகவாச்சாரி கோவிந்தராஜன் காலமானார். இவரது மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், தமிழக அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ரகுராம் ராஜனின் தந்தையும், இந்திய உளவுத்துறையில் சிறப்பாகப் பணி ஆற்றிய அதிகாரியுமான ராகவாச்சாரி கோவிந்தராஜன் மறைந்த செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
தந்தையாரை இழந்து தவிக்கும் ரகுராம் ராஜனைத் தொடர்புகொண்டு அவருக்கும் அவரது குடும்பத்தாரும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். நம் நாட்டின் பாதுகாப்புக்காக, குறிப்பாக RAW (Research and Analysis Wing) அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் இருந்து அதில் பணியாற்றிய சிறப்புக்குரிய ராகவாச்சாரி கோவிந்தராஜனின் பணி நன்றியுடன் நினைவுகூரப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.