'திராவிட இயக்கத்தை பாதுகாப்பதற்காக மதிமுக உறுதியான முடிவெடுக்கும். நான் திராவிட இயக்கத்தில் என்னுடைய முழு வாழ்வையும் அர்ப்பணித்திருக்கிறேன்' என வைகோ தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், ''மத்திய அரசின் பட்ஜெட் குறித்து காலையிலேயே செய்தியாளர்களைச் சந்தித்துச் சொல்லிவிட்டேன். கூட்டணி குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சுவார்த்தைக் குழு அறிவித்தவுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பேச்சுவார்த்தைக் குழு சந்திப்பார்கள். அதன் பிறகு நடக்கும் பேச்சுவார்த்தையை பொறுத்துதான் எத்தனை தொகுதிகள் என்பதெல்லாம் முடிவாகும். இப்பொழுது நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.
மதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு வேலை செய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை காப்பாற்றுவதற்காக நான் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி, நடைப்பயணங்கள் நடத்திப் பாதுகாத்துக் கொடுத்திருக்கிறேன். மீட்டுக் கொடுத்திருக்கிறேன். ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வைத்திருக்கிறேன். நியூட்ரினோ திட்டத்திற்கு 16 ஆண்டுகளாக தடை வாங்கி தடுத்து நிறுத்தி இருக்கிறேன். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வடநாட்டு முதலாளிகள் கையில் போய்விடாமல் இருக்க தடுத்து அதைப் பாதுகாத்து தந்திருக்கிறேன்.
அதைப்போல தமிழ்நாட்டினுடைய பொதுப்பிரச்சனைகளில் காவிரித்திரத்தில் மீத்தேன் வாயு, ஹைட்ரோ கார்பன் இவை எல்லாம் வரவிடாமல் ஊர் ஊராகச் சென்று நூற்றுக்கணக்கான ஊர்களில் பிரச்சாரம் செய்து எச்சரித்த மறுநாளே அந்த மீத்தேன் அலுவலகத்தையே காலி செய்து கொண்டுபோய் விட்டார்கள். என்னை பொறுத்தமட்டில் எங்களுடைய இயக்கம் பலவற்றை சாதித்திருக்கிறது. நான்கு மாநிலங்கள் கடந்து சென்று மத்திய பிரதேசத்தில் ஆயிரம் பேருடன் சென்று போராட்டம் நடத்தி இருக்கிறோம். அப்படி ஒரு சாதனையை இதுவரை ஒரு கட்சி தன் மாநிலத்திலிருந்து நான்கு மாநிலம் கடந்து செய்ததாக வரலாறே கிடையாது. மதிமுக சாதித்து காட்டி இருக்கிறது. திராவிட இயக்கத்தை பாதுகாப்பதற்காக உறுதியான முடிவெடுக்கும். நான் திராவிட இயக்கத்தில் என்னுடைய முழு வாழ்வையும் அர்ப்பணித்திருக்கிறேன். திராவிட இயக்கத்தின் ஈட்டி முனையாக இருக்கும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மை பெறும் தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்துவார் என்று முழுமையாக நம்புகிறேன். அதற்கான பிரச்சாரத்தில் நாங்கள் தீவிரமாக ஈடுபடுவோம்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள் விஜய்யின் 'திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி' என தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, ''எந்தக் கருத்தும் நான் சொல்ல விரும்பவில்லை'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/03/819-2026-02-03-07-38-39.jpg)