Pugazhendi has started a new party puratchi admk
அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், கர்நாடகா மாநில அதிமுக மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்து வந்த வா. புகழேந்தி என்பவர், தற்போது ‘புரட்சி அதிமுக’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்த புகழேந்தி, அதிமுகவின் கர்நாடகா மாநிலச் செயலாளராக பணியாற்றி வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி அணி, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் என அதிமுக இரண்டாக பிரிந்து போது புகழேந்தி சசிகலாவின் ஆதரவாளராக இருந்தார். எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை மீட்க டிடிவி தினகரனும், சசிகலாவும் தொய்வு காட்டிய நிலையில் டிடிவி தினகரன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவருக்கு ஆதரவு தெரிவிப்பதை நிறுத்தி கொண்டார்.
இதற்கிடையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவை மீட்க அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அணியை தொடங்கினார். எப்படியாவது அதிமுகவை ஓ.பன்னீர்செல்வம், மீட்பார் என்று எண்ணிய புகழேந்தி, அவருடைய அணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதனிடையே, கட்சி விதிமுறை மீறி எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டு சட்டப்போராட்டம் நடத்தி வந்தார்.
எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை ஓ.பன்னீர்செல்வம் மீட்பார் என்று எண்ணிருந்த வேளையில், அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுகவில் இணைந்தார். இதில் அதிருப்தியடைந்த புகழேந்தி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தருவதையும் நிறுத்திக் கொண்டார். இந்த நிலையில் அவர், ‘புரட்சி அதிமுக’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். ஏற்கெனவே அதிமுகவில் இருந்த சசிகலா, பன்ரூட்டி ராமச்சந்திரன் ஆகியோர் புதிய கட்சிகளைத் தொடங்கியுள்ள நிலையில் அந்த வரிசையில் புகழேந்தியும் புதிதாக கட்சித் தொடங்கியுள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய புகழேந்தி, “அதிமுக என்ற இயக்கத்திற்கும், பழனிசாமி அணியான அதிமுகவுக்கும் தான் போட்டி. ஜெயலலிதாவிற்கு உதவியாக இருந்து வழக்குகளை பார்த்த புகழேந்தியா? துரோகியாக மாறிய எடப்பாடி பழனிசாமியா? என்பதை வருகின்ற தேர்தல் சொல்லிவிடும். தமிழக முதல்வருக்கும், பழனிசாமிக்கும் போட்டி இல்லை. புகழேந்திக்கும் பழனிசாமிக்கும் தான் போட்டி. தமிழகத்தில் திராவிட இயக்கத்தில் இரண்டு கட்சிகள். பழனிசாமி தலைமையில் இருக்கின்ற அதிமுக அணி, போட்டியிட இடங்களை கேட்டு டெல்லி வந்து பாஜக காலிலே விழுகிறது. திராவிட முன்னேற்றக் கழகமும் சென்னையிலிருந்து முடிவு செய்கிறது. தலைமை கழகம் பிஜேபி அலுவலகமாக எடப்பாடி பழனிசாமிக்கு மாறிவிட்டது. தன்மானத்தை விட்டு கட்சி அடகு வைத்துவிட்டு தேர்தலை சந்திக்கும் பழனிசாமி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க புரட்சி அண்ணா திமுக காரணமாக இருக்கும். தேவைப்பட்டால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். காலம் குறுகியிருப்பதால் பொதுக்குழுவினை கூட்டி யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
Follow Us