புதுச்சேரி வில்லியனூர் அடுத்த மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன். இவருக்குப் புதுவை கோவிந்தசாலையை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ராஜ்குமார், தனக்கு ஜிப்மரில் முக்கிய அதிகாரியை தெரியும். அவர் மூலமாக ஜிப்மரில் செவிலியர் வேலை வாங்கித்தர முடியும் எனக் கூறினாராம். இதனை நம்பி முரளிதரன், அவரது மகளுக்குச் செவிலியர் வேலை வாங்கித்தரக்கோரி பணம் கொடுத்ததாகத் தெரிகிறது.
இதேபோல், இன்னும் சிலரிடமும் ராஜ்குமார் ரூ.40 லட்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், ராஜ்குமார் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் பணத்தை அளித்தவர்கள் திருப்பித்தரும்படி ராஜ்குமாருக்கு நெருக்கடி அளித்தனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து முரளிதரன், ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார், ராஜ்குமார் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், ஜிப்மரில் பதிவாளராக இருந்த மகேஷிடம் பணத்தை அளித்ததாகவும், அவர் வேலை பெற்றுத்தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது, புதுவை பல்கலைக்கழக துணை பதிவாளரான மகேஷ், டெபுடேஷன் அடிப்படையில் ஜிப்மரில் பணியாற்றியபோது பணத்தைப் பெற்றதாகவும் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஒதியஞ்சாலை போலீசார், இவ்வழக்கைப் புதுவை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றி விசாரித்து வருகின்றனர். இதனிடையே, புதுவை பல்கலைக்கழக துணை பதிவாளரான மகேஷ் மீது சென்னை சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவுக்குப் புகார் ஒன்று வந்தது. அதன்மூலம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், கடந்த 1.4.2023ம் ஆண்டு முதல் 19.12.2025 வரையுள்ள காலகட்டத்தில் பல்கலைக்கழக துணை பதிவாளரான மகேஷ் வருமானத்துக்கு அதிகமாக 57.15 சதவீதம் அவர் பெயரிலும், அவரது குடும்பத்தினர் பெயரிலும் அசையும், அசையா சொத்துகள் சேர்த்திருப்பது தெரியவந்தது.
மேலும் வருமானத்துக்கு அதிகமாக உள்ள ரூ.53 லட்சத்து 20 ஆயிரத்தை மகேஷ் முறையாகக் கணக்குக் காட்டவில்லை. இதையடுத்து, துணை பதிவாளரான மகேஷ் மீது ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் கடந்த 16ம் தேதி சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Follow Us