கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜி. ரவீந்திரன் வரைவு வழிகாட்டு விதிமுறைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

Advertisment

இத்தகைய சூழலில் தான் வரும் 5ஆம் தேதி (02.12.2025) புதுச்சேரியில் த.வெ.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில், ‘ரோடு ஷோ’ நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, காலாப்பட்டு முதல் கன்னியகோவில் வரை 'ரோடு ஷோ' செல்லவும், சோனாம்பாளையத்தில், வாகனத்தில் இருந்தபடி விஜய் பேசவும் முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதற்கு அனுமதி கேட்டு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடமும், டி.ஜி.பி., அலுவலகத்திலும் த.வெ.க., நிர்வாகிகள் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி மனு கொடுத்தனர். இருப்பினும் இது குறித்து போலீசார் எந்த பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

Advertisment

இதனால் டி.ஜி.பி.,யை சந்திக்க, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் கடந்த 29 ஆம் தேதி சென்றார். ஆனால், டி.ஜி.பி., அங்கு இல்லாததால் சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது தொடர்பாகப் பேசுகையில், “ரோட் ஷோவுக்கு அனுமதி மறுப்பது போது சரியான நிகழ்வு என்றே தோன்றுகிறது. ஏனென்றால் மிகப்பெரிய இழப்பு  நடந்துள்ளது. அந்த இழப்பு பிறகு இது மாதிரி ஒரு ரோட் ஷோ இங்குத் தமிழகம் போன்று மிகப்பெரிய சாலை அமைப்பு எல்லாம் கிடையாது. மிக விரிந்த சாலை எல்லாம் கிடையாது. அங்குத் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் இருக்கிறது. இங்கு மிகக் குறுகிய சாலை தான் உள்ளது. 

அனுமதி கேட்ட இடம் அதிக மக்கள் நடமாட்டம், மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இடம் ஆகும். அதனால் அதை தவிர்த்துவிட்டு அவர் (விஜய்) ஏதாவது ஒரு இடத்தில் பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்டி நடத்தட்டும். ரோட் ஷோக்கு அனுமதிக்க மாட்டோம் (மறுக்கிறோம்). அவர் கூட்டம் நடத்தட்டும். அதனை வரவேற்கிறோம். அவர் எங்கே வேண்டுமானாலும் கூட்டம் நடத்தலாம். புதுச்சேரி இட நெருக்கடியான ஒரு பகுதி.

Advertisment

tvk-vijay-angry

உயர்நீதிமன்றம் ரோடு ஷோ சம்பந்தமாக நிறைய அறிவுறுத்தல் எல்லாம் கொடுத்துள்ளது. எனவே புதுச்சேரியில் ரோட் ஷோவை தவிர்த்துவிடலாம் என்பது என்னுடைய வேண்டுகோளாக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். விஜய்  இந்த ரோட் ஷோவை புதுச்சேரியில் தவிர்த்துவிட்டு மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்துவதற்கான உத்தரவைப் புதுச்சேரி அரசாங்கம் வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.