தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கீழணை முதல் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான கடலூர் மாவட்டம் கீழத்திருக்கழிப்பாலை வரை 60 கி மீ பயணம் செய்யும் கொள்ளிடக்கரையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது  47 கிராமங்களுக்கு பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் மண்ணரிப்பு ஏற்பட்டு கொள்ளிடக்கரையின் சாலை உள்வாங்கி அவ்வப்போது சேதமாகி வருகிறது. இதனால் இந்த கரையை ஒட்டியுள்ள 47 கிராம மக்கள் அவசர தேவைகளுக்கு பேருந்து வசதி இல்லாமல் அவசர ஊர்திகள் கிராம பகுதிகளுக்கு செல்ல முடியாமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.  

Advertisment

அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு நகரங்களுக்கு செல்வதாக இருந்தாலும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலும் இந்த சாலை மிகவும் முக்கிய சாலையாக உள்ளது. மேலும் இது பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் தினக்கூலிக்கு செல்லும் தொழிலாளர்கள் அலுவலகம் செல்லும் ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும்  கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.கொள்ளிடக்கரையை ஒட்டியுள்ள கிராமங்களில் காய்கறிகள், பூச்செடிகள், நெல் பயிர்கள் உள்ளிட்ட பல விவசாய பணிகளுக்கு தேவையான இடுபொருட்களை வாகனத்தில் எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. 

Advertisment

கவரப்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான கீழத் திருக்கழிப்பாலை, மேல திருக்கழிப்பாலை, பின்னத்தூர், தில்லைவிடங்கன், உத்தமசோழமங்கலம், நடராஜபுரம், வசப்புத்தூர், கணக்கரப்பட்டு முதலிய கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகளும் மாதாந்திர பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களும் இந்த பழுதடைந்த சாலையால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மழைகாலத்தில் பாதிப்பு இன்னும் அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக போக்குவரத்திற்கு ஏற்றவாறு சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.