Professor Subha. veerapandian's speech at annamalai university
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உலக சமூக நீதிநாள் அனுசரிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் அறிவுடைநம்பி தலைமை தாங்கினார். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தமிழ்நாடு சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், தமிழகத்தில் சமூகநீதி வளர்ந்த வரலாற்றை சமூக நீதிக்காக உழைத்த தியாகிகளின் உழைப்புகளோடு ஒப்பிட்டு பேசினார்.
மேலும் அவர், “போட்டி என்பது சமமானவர்களுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். சமமற்றவர்களோடு போட்டி அமைய முடியாது. சாதி, மதம், பிறப்பு போன்றகாரணிகளை கொண்டு மனிதர்களை பாகுபடுத்த முடியாது. ஆண், பெண், மூன்றாம் பாலினம் என பிறப்பை வைத்து பாகுபாடு காட்ட கூடாது” என விளக்கினார். இன்று உலகத்தாய் மொழிதினம் என்பதை குறிப்பிட்டு தாய்மொழியின் அவசியம் மற்றும் பிற மொழிகளை எவர் மீதும் திணிக்க இயலாது என்பதை எடுத்துரைத்தார். மேலும் தமிழ்த் திரைப்படங்களும் சமூக நீதியும் என்ற தலைப்பில் சமூக நீதியை போன்ற வளர்த்த பல்வேறு திரைப்படங்களை ஆதாரத்தோடு எடுத்துரைத்து சிறப்புப் பேருரை ஆற்றினார்.
பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு, இணைப்பதிவாளர் ஜெகதீஸ்வரன் பேசினார்கள். ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் சி சுப்ரமணியன் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் முத்து வேலாயுதம் நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கூட்டமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்கிருஸ்டி, தனசேகரன், மோகன் மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
Follow Us