தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தில்  கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம்.. நாளுக்கு நாள் பரபரப்பை கூட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர்.. கரூரில் முகாமிட்டு கடந்த 5ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை குழுவுக்கு தடை கேட்டு தவெக தலைமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

Advertisment

அதே வேளையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 வயதான பிரித்திக் என்ற சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் பெயரில், அமன் மாலிக் என்ற வழக்கறிஞர்.. இவ்வழக்கை சிபிஐக்கு விசாரணை வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், இந்த வழக்கை தாங்கள் தொடரவில்லை என்றும், இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பிரித்திக்கின் தாய் ஷர்மிளா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து பிரித்திக்கின் தாய் ஷர்மிளா கூறியதாவது: பிரித்திக் எனது மகன்தான். பன்னீர்செல்வம் எனது கணவர்தான். ஆனால் இந்த வழக்கு போட்டது பற்றி எனக்கு தெரியாது. பணத்துக்காக இந்த மாதிரி செய்கிறார் என தெரிகிறது. பையனுக்காக அவர் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை. உயிரிழந்த மகனை பார்க்கவோ, விசாரிக்கவோ இல்லை. அவன் என்ன படிக்கிறான், அவனுக்கு என்ன வயசு, என்ன பிடிக்கும் எதுவுமே அவருக்கு தெரியாது. இத்தனை வருஷம் கழித்து, ஏன் வருகிறார் என தெரியவில்லை. அவர் என்னை விட்டுப் போய் 8 வருடம் ஆகிறது.

பையனை நானும் அம்மா, தம்பியும் தான் பார்த்துக்கிட்டோம். பையனுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பையன் இறந்ததும் சுடுகாட்டுக்கு வந்து பார்த்து விட்டு உடனே சென்றுவிட்டார். அதன்பிறகு,  தவெக கட்சியில் இருந்து பேசினார்கள், அவரோட பெயருக்கு செக் போட சொல்லி பிரஷர் பண்றாங்க.. பையன் யாருகிட்ட இருந்தான்னு புரூப் வேணும்னு சொல்லி கால் பண்ணி கேட்டிருந்தாங்க.

Advertisment

பன்னீர் செல்வத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தவெக காரங்களோ அல்லது யாரோ தூண்டுதலின் பேரில் தான்.. பணத்துக்காக தான் அவர் இப்படி பண்றாரு" எனக்கூறி கண்ணீர் விட்டார். இதுதொடர்பாக ஷர்மிளாவின் தம்பி சந்துரு கூறுகையில், ‘அவரு வந்து இந்த அளவுக்கு நாலெட்ஜான ஆள் கிடையாது.. சுப்ரீம் கோர்ட்ல போயி கம்ப்ளெயிண்ட் பண்ற அளவுக்கு பினான்சியலாகவும், நாலெட்ஜூம், அறிவும் அவருக்கு கிடையாது. அவருக்கு பின்னால யாரோ இருக்காங்க" என தெரிவித்தார். கரூர் துயர சம்பவ விவகாரத்தில் இந்த அதிர்ச்சி திருப்பம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.