Prime Minister's plane lands on Assam National Highway
அசாம் மாநிலத்தில் திப்ருகர்க் மாவட்டத்தில் அவசரக் காலங்களில் விமானங்களைத் தரையிறக்க ஏதுவாக புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள, இந்த சாலையை இந்திய விமானப் படை வடிவமைத்துள்ளது. 40 டன் வரையிலான போர் விமானமும், 74 டன் வரையிலான பயணிகள் விமானமும் இந்த சாலையைப் பயன்படுத்தலாம். பேரிடர் மற்றும் அவசரக் காலங்கள் போன்ற அசாதாரண சூழல்களில் இந்த சாலையைப் பயன்படுத்த முடியும்.
இந்த சாலையில் பிரதமர் மோடியின் விமானம் தரையிறக்கப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கிய பிறகு, அங்கு நடைபெற்ற விமான சாகசத்தைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். சுகோய் சு30 எம்கேஐ, ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள், பயணிகள் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் போன்றவை இந்த சாலையில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர், பிரதமர் மோடி கவுகாத்திக்குப் பயணித்தார். இதையடுத்து, மற்ற விமானங்களும் புறப்பட்டுச் சென்றன.
அவசரக் காலங்களில் பயன்படுத்தும் வகையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட 11வது சாலை இதுவாகும். வட கிழக்கு மாநிலங்களில் முதன்முதலாக உருக்கப்பட்ட அவசரக்கால தேசிய நெடுஞ்சாலை இதுவாகும். இந்த மாநிலங்களில், அடிக்கடி ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை விரைவில் கொண்டுசெல்ல இந்த சாலை பயனுள்ளதாகவும் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us