Prime Minister Modi's advice to students
பரிஷா பெ சர்ச்சா (தேர்வு குறித்த விவாதம்) என்ற தலைப்பில் ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்த உரையாடலில் மாணவர்கள் நேர்மையுடனும் தன்னம்பிக்கையுடனும் எப்படித் தேர்வினை எதிர்கொள்வது என்பது குறித்த கருத்துக்களை மாணவர்களுடன் விவாதிப்பார். அதே போல இந்த ஆண்டும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இது குறித்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் மாணவர்களுக்கு “உங்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் என யார், எந்த விதமான அறிவுரைகளைக் கூறினாலும், நீங்கள் உங்களுக்குப் பிடித்த இலக்கை மட்டும் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். அந்த இலக்கை அடைய முயற்சி செய்யுங்கள். எந்த இலக்கையும் எளிதில் அடைந்து விட முடியாது. இருப்பினும் அந்த இலக்கை தொடர்ந்து பின்பற்றுங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றிலும் சமநிலையைப் பின்பற்ற வேண்டும். காரணம், ஒரு பக்கமாக வளைந்தால் விழுந்து விட நேரிடும். அதனால், நம்மிடம் வாழ்க்கைத் திறன்களும், தொழில்சார் திறன்களும் சம அளவில் இருப்பது அவசியம்.
இதனைக் கல்வியின் மூலமாக மட்டுமே பெற முடியும். நாம் எப்போதும் கல்வியை ஒரு சுமையாகக் கருதக் கூடாது. நாம் முழு ஈடுபாட்டோடு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உங்களது வெற்றி உங்கள் பெற்றோரின் மரியாதையாக மாறும். உங்களுக்கு கேமிங்கில் ஆர்வம் இருக்கலாம். கேமிங் என்பது ஒரு திறமை தான். ஆனாலும், பணத்திற்காக கேமிங்கில் ஈடுபடுபவர்கள் அழிந்து தான் போவார்கள். அதே நேரத்தில், இந்தியாவில் டேட்டா மலிவாகக் கிடைக்கின்றது. அதனால், சமூக வலைத்தளங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
நான் கடந்து போன நாட்களைப் பற்றி எண்ணுவதில்லை. மீதமுள்ள நாட்களை மட்டுமே, நான் கவனத்தில் கொள்கிறேன். அதனால், உங்களுக்கு ஒன்றைச் சொல்லுகிறேன். நீங்கள் எப்போது கடந்த காலத்தைப் பற்றி எண்ணாதீர்கள். உங்கள் முன்னாள் இருக்கும் எதிர்காலத்தை வாழ முயற்சி செய்யுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.
Follow Us