இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (25.02.2026) இஸ்ரேல் நாட்டுக்குப் புறப்பட்டார். பிரதமர் மோடி இன்றும், நாளையும் (26.02.2026) என இரு நாட்கள் இஸ்ரேலில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக அவ்ர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “எனது அன்பு நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பை ஏற்று, நான் பிப்ரவரி 25-26 தேதிகளில் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

Advertisment

இந்தியாவும் இஸ்ரேலும் வலுவான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு மூலோபாய கூட்டாண்மையைப் (Strategic Partnership) பகிர்ந்து கொள்கின்றன. இது சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் வேகத்தையும் கண்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம், விவசாயம், நீர் மேலாண்மை, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் நெதன்யாகுவுடன் மேற்கொள்ளவிருக்கும் கலந்துரையாடல்களை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம். 

Advertisment

இந்த பயணத்தின் போது, ​​இஸ்ரேல் அதிபர் மேதகு ஐசக் ஹெர்சாக்கையும் நான் சந்திக்க உள்ளேன். மேலும், இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டில் (Knesset) உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் நான் பெறுவேன். இந்த நிகழ்வு நமது இரு நாடுகளையும் பிணைக்கும் வலுவான நாடாளுமன்ற மற்றும் ஜனநாயக உறவுகளுக்குச் செலுத்தும் ஒரு மரியாதையாக அமையும். இந்தியா - இஸ்ரேல் இடையிலான சிறப்பான நட்புறவை நீண்டகாலமாக வளர்த்து வரும் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடுவதையும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

எனது இந்த அரசுமுறைப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த பிணைப்பை மேலும் உறுதிப்படுத்தும் என்றும், மூலோபாய கூட்டாண்மைக்கான புதிய இலக்குகளை நிர்ணயிக்கும் என்றும், அதேபோல் ஒரு நெகிழ்வான, புதுமையான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான நமது பகிரப்பட்ட பார்வையை மேம்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment