Prime Minister Modi takes important decision on Iran-Israel tension intensifies
அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து இஸ்ரேல்- அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், ஈரானும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், அமெரிக்க நட்பு நாடுகளான துபாய் பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால், சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதில் கோபம் கொண்ட ஈரான், அமெரிக்கவிற்கு கூடுதல் சேதங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக துல்லியமான தாக்குதலை கையில் எடுத்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா தொடர்பு உள்ள நாடுகளான குவைத், ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் இருக்கக்கூடிய இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்த நிலையில் அங்கு தவித்து வரும் இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியர்களின் பாதுகாப்பு நலன் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஓமன், குவைத் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் தொலைப்பேசி வாயிலாக பேசி கேட்டறிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஓமன் அதிபர் சுல்தான் அத்தீம் பின் தாரிக் மற்றும் குவைத்தினுடைய இளவரசர் ஆகியோரிடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அனைத்து நாடுகளும் இந்த போர் சூழலை கைவிட்டு அமைதியான முறையில் பிரச்சனையை தீர்த்து ஒரு சுமூகமான முடிவை எட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது, ‘ஈரான் - இஸ்ரேல் போர் விவகாரத்தில் தேசிய நலன் கருதி உரிய முடிவு எடுக்கப்படும். போர் சூழலை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். பிரதமர் மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சரும், அந்தந்த நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். தாக்குதல் குறித்து ஓமன் சுல்தான், குவைத் இளவரசரிடம் பிரதமர் மோடி கவலைத் தெரிவித்தார். ஓமன், குவைத்தில் வசிக்கும் இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்தும் விவாவித்தார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us