Prime Minister Modi honored with Ghana's highest award Photograph: (Narendra modi X)
கானா, அர்ஜெண்டினா, பிரேசில், நம்பீயா மற்றும் டிரினிடாட் & டொபாகோ ஆகிய ஐந்து நாடுகளுக்கு ஜூலை 2ஆம் தேதி ஜூலை 9ஆம் தேதி பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். அதன்படி, பிரதமர் மோடி நேற்று (02-07-25) இந்தியாவில் இருந்து புறப்பட்டார். முதல் பயணமாக, ஆப்பிரிக்கா நாடான கானாவுக்கு நேற்று மாலை சென்றடைந்தார். கோடகா விமான நிலையத்தில் அவருக்கு இந்தியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கானா நாட்டில் அதிபர் ஜான் டிராமினி மஹாமா, கானா அரசு மற்றும் அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கானா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ‘ஆபிசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ (Officer of the order of ther star of Ghana) என்ற விருதை அந்நாட்டு அதிபர் ஜான் டிராமினி மஹாமா வழங்கி கெளரவித்தார். இந்த விருதைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா விருதை எனக்கு வழங்கியதற்காக கானா மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்த விருது ஒரு தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, 140 கோடி இந்திய மக்களின் சார்பாக நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த கௌரவம் நமது இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலம், நமது வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வலுவான இந்தியா-கானா நட்புறவை நோக்கி தொடர்ந்து பாடுபடுவதற்கு இந்த கௌரவம் ஒரு பொறுப்பாகும். இந்தியா எப்போதும் கானா மக்களுடன் துணைநிற்கும். நம்பகமான நட்பு நாடாக தொடர்ந்து பயணிக்கும்” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, இரு தலைவர்களும் விரிவான விவாதங்களை நடத்தி, இருதரப்பு உறவை ஒரு விரிவான கூட்டாண்மையாக உயர்த்த முடிவு செய்தனர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எந்த இந்தியப் பிரதமரும், கானாவுக்கு செல்லாத நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக அங்கு சென்றுள்ளார். இந்த பயணத்தில் கானா மற்றும் இந்தியாவுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அதனை தொடர்ந்து, வரும் 6ஆம் தேதி பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.