வரவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதனால் தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் வரும் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழகம் வரவுள்ளனர். தமிழகம் வரும் அவர்கள், சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த ஆலோசனையில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் விரைவில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி மூன்று முறை தமிழகம் வரவுள்ளார். அதன்படி மார்ச் 1இல் மதுரை, மார்ச் 7இல் வேலூர், மார்ச் 11ஆம் தேதி திருச்சி, தஞ்சை என மூன்று முறை பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். அதே நேரத்தில் மார்ச் 1இல் புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். ஏற்கெனவே கடந்த ஜனவரி 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டத் தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/18/moditamilnadu-2026-02-18-18-31-13.jpg)