சாமி தரிசனம் செய்வதற்காக கேரள சபரிமலைக்கு சென்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் ஹெலிகாப்டர் கான்கிரீட் தளத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேற்று மாலை 6:20 மணியளவில் டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் திருவனந்தரம் வந்தார். அவருக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கிய குடியரசுத் தலைவர், இன்று (22-10-25) காலை 9:35 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றார். நிலக்கல்லில் இறங்கிய அவர், அங்கிருந்து கார் மூலம் பம்பை சென்றடைந்தார். பம்பை கணபதி கோயிலில் வைத்து இருமுடி கட்டிய பின் 11 மணியளவில் பம்பையில் இருந்து ஜீப் மூலம் சன்னிதானம் சென்றார்.
அங்கு அவருக்கு ஜயப்பன் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரும், அவரது மெய்க்காவலர்களும் இருமுடி கட்டி சபரிமலை கோயிலில் 18ஆம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார். இதையடுத்து சபரிமலை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் இருந்து இருமுடியை பெற்றுக் கொண்டார்.
முன்னதாக சபரிமலைக்குச் செல்வதற்கு முன்பாக பத்தினம்திட்டாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வந்திருங்கிய ஹெலிகாப்டரின் டயர் கான்கிரீட் தளத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சபரிமலைக்கு செல்வதற்காக ஆளுநர் மாளிகையில் இருந்து காலை 7:30 மணிக்கு அவர், ஹெலிகாப்டர் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக நிலக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்க வேண்டிய ஹெலிகாப்டர் காலை 9 மணிக்கு பிரமாணம் மைதானத்தில் தரையிறங்கியது. இதனால், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஹெலிகாப்டரில் இருந்து வெளியே வந்த பிறகு ஹெலிகாப்டரின் டயர் கான்கிரீட்டில் சிக்கிக் கொண்டர்து. இதனையடுத்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சேர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு ஹெலிகாப்டரை தள்ளி நகர்த்தினர். இதனால் அங்கு சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது.