காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு தான் காரணம் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டிருந்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது.

Advertisment

மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் மே 10ஆம் தேதி மாலை 5 மணியளவில் தாக்குதலை நிறுத்தப்படுவதாக அறிவித்தது. இதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.

Advertisment

இதற்கிடையில் இந்த தாக்குதலை நிறுத்தியது அமெரிக்கா தான் என்றும், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தினேன் என்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டதா? என்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். டிரம்ப்பின் கூற்றை இந்தியா மறுத்தபோதிலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதன் மூலம் கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றியதாக அதிபர் டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் இன்று (23-12-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிபர் டிரம்ப், “ரஷ்ய அதிபர் புடினுக்கும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கும் இடையே மிகப்பெரிய வெறுப்பு நிலவுகிறது. நான் 8 போர்களைத் தீர்த்துவிட்டேன். தாய்லாந்து கம்போடியாவுடன் ஒத்துப்போகத் தொடங்குகிறது, நாம் அதை நல்ல நிலையில் வைத்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

Advertisment

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அணு ஆயுதப் போரை நாங்கள் நிறுத்தினோம். அதிபர் டிரம்ப் 1 கோடி உயிர்களைக் காப்பாற்றினார், ஒருவேளை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறினார். 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்தப் போர் தீவிரமாகத் தொடங்கியது. நான் இன்னும் தீர்க்காத ஒரே போர் ரஷ்யா-உக்ரைன் தான்” என்று கூறினார்.