இந்திய வரலாற்றில் முதல் முறையாக ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையை திரெளபதி முர்மு பெற்றுள்ளார்.

Advertisment

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் ரஃபேல் போர் விமானம் உள்ளது. இந்த சூழ்நிலையில், ஹரியானாவுக்கு வருகை தந்து திரெளபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் பயணிப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அம்பாலா விமானப்படைத் தளத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (29-10- 25) ராணுவ உடையில் வருகை தந்தார். அவருக்கு விமானப்படை சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

Advertisment

அதன் பின்னர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரஃபேல் போர் விமானத்தில் திரெளபதி முர்மு ஏறினார். குரூப் கேப்டன் அமித் கெஹானி விமானத்தை இயக்க, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் பயணித்தார். விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் அதே தளத்திலிருந்து ஒரு தனி விமானத்தில் பறந்தார். சுமார் 30 நிமிடங்கள் வானிலேயே சீறிப்பாய்ந்த திரெளபதி முர்மு பயணித்த ரஃபேல் போர் விமானம், அதன் பின்னர் தரையிறக்கப்பட்டது. இந்த பயணத்தின் மூலம், ரஃபேல் போர் விமானத்தில் பயணித்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரெளபதி முர்மு பெற்றுள்ளார்.

இந்த விமானப் பயணத்தின் மூலம், இந்திய விமானப்படையின் இரண்டு போர் விமானங்களில் பறந்த முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை திரெளபதி முர்மு பெற்றார். ஏப்ரல் 2023 இல், அவர் அசாமில் உள்ள தேஸ்பூர் விமானப்படை நிலையத்தில் இருந்து சுகோய்-30 எம்.கே.ஐ.யில் பறந்தார். இவருக்கு முன்பு, சுகோய் போர் விமானங்களில் முன்னாள் குடியரசுத் தலைவர்களான அப்துல் கலாம், பிரதிபா பாட்டீல், ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி தாக்குதலாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் ரஃபேல் போர் விமானம் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment