தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை எனத் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. 

Advertisment

அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சிகளான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. 

Advertisment

இந்நிலையில் வரும் ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொட்ர்பாக அக்கட்சியின் தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.  குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “வருகின்ற ஜனவரி 09, 2026 மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 இப்போ கடலூரிலே பாசார் கிராமத்திலே நடக்க இருக்கின்ற மாநாட்டை மிக பிரம்மாண்டமான வெற்றி மாநாடாக அமைத்து தந்து அந்த வெற்றி உங்களுக்கான வெற்றி என்பதை  தெரிவித்து கொண்டு அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம். நமது முரசு எட்டு திக்கும் வெற்றி முரசு கொட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.