இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் கூட்டணியை இறுதி செய்து வருகின்றன. இருப்பினும், தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வருகிறது. இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “கூட்டணி விவகாரத்தைப் பொறுத்த வரையில், எங்கள் கட்சிக்கும், கட்சியின் எதிர்காலத்திற்கும் எது நல்லது என யோசித்து முடிவெடுப்போம். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதனால், கூட்டணி குறித்து இப்போதே தெரிவிக்க வேண்டிய அவசரம் ஏதும் இல்லை. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு கட்சிகளும் அவர்களுடைய கூட்டணியை இன்னும் இறுதி செய்யவில்லை. நாங்கள், கூட்டணி குறித்து எங்கள் மாவட்ட நிர்வாகிகளைக் கலந்து ஆலோசித்து வருகிறோம். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப தேமுதிக மகத்தான கூட்டணியை அமைக்கும்.

Advertisment

எங்கள் கட்சியின் மாவட்ட , நகர,  ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் மனநிலையை அறிந்து ஒரு நிலைப்பாடு எடுக்க உள்ளோம். தற்போதைக்கு, தேமுதிகவின் 4 கட்ட தேர்தல் பிரச்சார பயணம் தமிழ்நாடு முழுவதும் நடக்க இருக்கிறது. அதே நேரத்தில், மதுரை முதல் கன்னியாகுமரி வரை சென்று கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துத் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுக்குத் தோழமை காட்சிகள் தான். நாங்கள் எந்த கட்சியுடனும் வேற்றுமை பாராட்டுவதில்லை.

Advertisment

விஜயகாந்த்தின் ஒரே தலைவர் எம்ஜிஆர் தான். அதனால் தான் கட்சி அலுவலகத்தில் அவரது சிலையை வைத்திருக்கிறோம். அதே நேரத்தில், ஒரு பெண் தலைவராக நான் அனைத்து கட்சியிலும் உள்ள பெண் தலைவர்களையும் மதிக்கிறேன். அவர்களுடன் எனக்கு மிகுந்த அன்பும் நட்பும் உள்ளது. தேமுதிகவின் எதிர்காலத்தைக் கருதி, கழகத்தின் அனைவரின் விருப்பத்தையும் உள்ளடக்கியதாக எங்கள் கூட்டணி முடிவு இருக்கும். அதே நேரத்தில், எங்களுக்குரிய அங்கீகாரம், மரியாதை கிடைக்குமிடத்தில், எங்கள் கட்சித் தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன்  நாங்கள் கூட்டணி அமைப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.