திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகில் 27 ஆம் தேதி சூரஜ் என்ற வடமாநில இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் திருத்தணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த வடமாநில இளைஞர் சூரஜை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். ''முதல்கட்ட விசாரணையில் இளைஞர் வடமாநில இளைஞர் என்பதற்காக மட்டும் தான் தாக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை. முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் புகார்தாரர் சொன்னதை வைத்து சொன்னால் ''என்னை மொறச்சு பாக்குறியா'' எனப்பேசியதில் இந்த பிரச்சனை தொடங்கியுள்ளது. அதேபோல் முதற்கட்ட விசாரணையில் ஒரு குறிப்பிட்ட போதைப்பொருட்களை அவர்கள் உட்கொண்டிருந்தார்கள் என்பது குறித்து எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

Advertisment

பட்டாக்கத்தியை எங்கிருந்து கொண்டுவந்தீர்கள் எனக் கேட்டோம். வீட்டில் தான் வைத்திருந்தோம். ஏற்கனவே மற்ற பசங்களோடு முன்விரோதம் இருந்ததால் எங்களை தாக்க வருவார்கள் என்பதால் வைத்திருந்தோம். அதைத்தான் நாங்கள் பயன்படுத்தினோம் என கைதான சிறுவர்கள் சொல்லியுள்ளார்கள். இரண்டு பட்டாக்கத்திகள், இரண்டு செல்போன்கள் சீஸ் பண்ணிருக்கோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார்.