வருகின்ற சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்மரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், ஒவ்வொரு கட்சிகளும், தங்களது கட்சிக்குள் குழு ஒன்றை அமைத்து கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட தேர்தல் பிரச்சாரப் பணிகளில் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக காங்கிரஸில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஈடுபாடு காட்டியது. ஆனால், திமுகவில் கூட்டணி தொடர்பான குழு அமைக்கப்படாததால் காங்கிரஸ் சங்கடத்தில் இருந்து வந்தது. 

Advertisment

அதே சமயம், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் சமீபத்தில் தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 71 மாவட்டத் தலைவர்களை அழைத்து டெல்லியில் காங்கிரஸ் தலைமை நேற்று (10.02.2026) ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டம் முடிந்த பிறகு செல்வப்பெருந்தகை மற்றும் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களளைச் சந்தித்துப் பேசினர். அதில் செல்வப்பெருந்தகை, கூட்டணி தொடர்பாக திமுக இன்னும் குழு அமைக்காததால் காங்கிரஸ் தலைமை வருத்தமாக இருப்பதாகவும், இதனால் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படுவதாகவும், எனவே திமுக உடனடியாக தேர்தல் பணிக் குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

Advertisment

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையை தொடங்கும் என திமுக தலைமைக்கழகம் அறிவித்தது. மற்றொருபுறம் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக - காங்கிரஸ் கூட்டணி, மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பாகத் தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “திமுக -காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் நிச்சயம் இணக்கமாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பது மாதிரி இல்லை. ஊடகங்கள் அது போன்ற (திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இருப்பது போன்று) ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். 

india-today-mks

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இரு கட்சியினரும் நன்றாக இருக்கிறோம். ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் (திமுகவுக்கும்) தெரியும். அவர்களுக்கும் (காங்கிரஸுக்கும்) தெரியும். இது இடையில் உள்ள சிலர் கிளப்பிவிடும் பிரச்சனை. கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா? என்று திட்டமிட்டு சதி செய்கின்றனர். அதனைப்பற்றி திமுகவும், காங்கிரஸும் கவலைப்படுவதில்லை” எனத் தெரிவித்திருந்தார். 

Advertisment

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அனைத்தும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் உடன்படும்போது, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏதோ ஒரு போலியான 'தனித்தன்மை' இருப்பதாகக் கூறிக்கொண்டு, அதிகாரத்தைப் பகிர மறுப்பது ஏன்?. மற்ற இந்தியர்களைப் போலவே, தமிழ்நாட்டு மக்களுக்கும் கூட்டாட்சி முறையில் (கூட்டணி ஆட்சியில்) எந்தப் பிரச்சனையும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.