PR Pandian sentenced to 13 years in prison at Case in 2015
தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியபுரம் அருகே காரியமங்கலம் கிராமத்தில், ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு எண்ணெய் எடுப்பதற்காக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணியை தொடங்கியது. இந்த பணிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அந்த போராட்டத்தின் போது ஓஎன்ஜிசி தளவாடங்களைச் சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை திருவாரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 22 பேரில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று (06-12-25) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ், பி.ஆர்.பாண்டியனை முதல் குற்றவாளி என அறிவித்து அவருக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.13,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜுக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.13,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மீதமுள்ள 18 பேருக்கு எதிராக எந்தவித ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுதலை செய்து நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பளித்தார்.
Follow Us