ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய 1996 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஜூலைம் மாதம் 10ஆம் தேதி (10.07.2025) வெளியிடப்பட்டது. இத்தேர்விற்குத் தகுதியுள்ள தேர்வர்கள் https://www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அந்த அறிவிப்பில் இதற்கான போட்டித் தேர்வு கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி (28.09.2025) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்றொருபுறம் அதே நாளில் (28.09.2025) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குருப் 2 மற்றும் 2 ஏ (Group II and II A Services) தேர்வை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. இதனால், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி முதுகலை ஆசிரியர். உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அக்டோபர் மாதம் 12ஆம் தேதி (12.10.2025) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 1996 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று (12.10.2025) காலை முதல் மதியம் வரை நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 2 லட்சத்து 36 ஆயிரத்து லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் 809 தேர்வு மையங்களில் தேர்வானது நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் வர வேண்டும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.