Skip to main content

“உங்கள் கடனும் ரத்து செய்யப்படும்!” - அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

"Your loan will be canceled .." - Minister Senkottayan ..!

 

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க. அலுவலகத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்துவைத்தனர். முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “இந்தியாவிலேயே பள்ளிக் கல்வித்துறையில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. அதனை ஏராளமான பத்திரிகைகள் எழுதியுள்ளது. ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் செய்யமுடியாது. 

 

திட்டமிட்டபடி திங்கள்கிழமை 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும். மீதமுள்ள வகுப்புகள் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் கட்டணத்தைச் செலுத்த பெற்றோர்களை தனியார் பள்ளிகள் நிபந்தனை விதிப்பதாகப் பெற்றோர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

 

முன்னதாக கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் ஏழை பெண்களின் திருமணத்திற்குத் தாலிக்குத் தங்கம், திருமண உதவித்தொகை மற்றும் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு மக்களிடம் பேசிய செங்கோட்டையன், “கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இந்த எட்டுமாத காலத்தில் தனிமனித கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியிலிருந்தபோது தங்கத்தின்விலை சவரன் ஒன்றுக்கு ரூ.32 ஆயிரமாக இருந்தது. தற்போது தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

 

அதனால் நிதிப் பற்றாக்குறையால் கால தாமதம் ஏற்பட்டது. இனிவருகின்ற காலத்தில் திருமணம் நடைபெறும்போதே உதவிகள் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்துவருகிறார். குழந்தைகள் கல்வியாளராக வரவேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமாக உள்ளது. வருகின்ற 9ஆம் தேதி, கோபிசெட்டிபாளையத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் நபர்களுக்காவது வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

 

மடிக்கணினி வழங்கும் மாநிலமும், தாலிக்குத் தங்கம் வழங்கும் மாநிலமும் தமிழகம்தான். விவசாயிகளின் கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே என்று நீங்கள் எண்ணுவது எனக்குத் தெரியும். உங்கள் கடனும் ரத்து செய்யப்படும் என சூசகமாகத் தெரிவிக்கிறேன். அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நாளொரு மேனியுமாக பொழுது வண்ணமுமாகத் திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. இன்னும் பல்வேறு திட்டங்கள் உங்ளை நாடி வரவுள்ளது என்பதை மட்டும் நான் இந்நேரத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.

 

கூட்டம் முடிந்ததும் அங்கு கூடியிருந்த அதிமுகவினர் மற்றும் பெண்கள் அமைச்சர் மகளிர் சுய உதவிக் குழுவினரின் கடனைப் பற்றித்தான் சூசகமாகச் சொல்லுகிறார் எனப் பேசிக்கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.