புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க முடியாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததை அடுத்து தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தமிழக அரசு சார்பில் இருமொழிக் கொள்கை மட்டுமே தமிழகத்திற்கு உகந்தது என பல்வேறு நேரங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அண்மையில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 'தங்கள் வாக்கு வங்கி ஆபத்தில் இருப்பதாகஉணரும் போது, திமுகவினர்மும்மொழிக்கொள்கை என பிளவுகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள்' என்ற கருத்தை முன் வைத்திருந்தார். இந்நிலையில் இதற்கு 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிலளித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'தமிழ்நாட்டில் நியாயமான தொகுதி மறுவரையறை, இருமொழிக் கொள்கை நாடு முழுவதும் எதிரொலித்திருக்கிறது. இது வாக்கு அரசியலுக்கான கலவரம் அல்ல; நீதிக்கான போர். நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. அதனை திணிப்பதையும் ஆதிக்கத்தையும் தான் எதிர்க்கிறோம். வெறுப்புணர்வு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுப்பது நகைச்சுவை' என தெரிவித்துள்ளார்.