“தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்போம்” முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 

Will support Tamil Nadu government in NEET issue former minister sengkottaiyan

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஆக.13ஆம் தேதி காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். அதன்பின் சட்டமன்றத்தில் தொடர் மானிய கோரிக்கை விவாதங்கள் நடந்துவருகிறது. இந்நிலையில் நேற்று சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “கடந்த 1967-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இரண்டு திராவிடக் கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. திராவிட மண்ணில் என்றும் வேறு கட்சிகள் நுழைய முடியாது. முந்தைய அதிமுக ஆட்சியில் பல நல்லதிட்டங்களை தந்துள்ளோம். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதைமனதில் வைத்து அங்கன்வாடிகளில் உள்ளபிள்ளைகளுக்காக, அருகே உள்ள பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு, அங்கு 46,691 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

கடந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 1.20 லட்சம் மாணவர்களும், இந்த ஆண்டு 3 லட்சம் மாணவர்களும் சேர்ந்துள்ளனர். மாணவர்கள் இடைநிற்றல் 0.75 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், கரோனா காரணமாக பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால், இடைநிற்றலை தடுக்கும் திட்டத்தில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இடைநிற்றலை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்களை வழங்கினார். 45 லட்சம் மடிக்கணினிகளும், 59.60 லட்சம் சைக்கிள்களும் அளிக்கப்பட்டன. 630-க்கும் அதிகமான பள்ளிகளில் ரூ.514 கோடியில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டன. அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தினரும் வியந்து பார்க்கும் வகையில் புதிய பாடத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இந்தப் பாடத் திட்டத்திலேயே இருந்தே அதிக கேள்விகள் கேட்கப்பட்டன.

கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த அரசும் சிறப்பாக பணியாற்றி வருவதை காண முடிகிறது. நீட்தேர்வு மற்றும் இருமொழிக் கொள்கை விவகாரத்தில் அரசுக்கு அதிமுக துணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

செங்கோட்டையன் பேசிக் கொண்டிருந்தபோது, அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்து பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். அப்போது, செங்கோட்டையன் “தமிழக சட்டப் பேரவையில் 9 முறை உறுப்பினராக இருந்து வருகிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு பேரவை கண்ணியத்துடன் நடைபெற்று வருகிறது” என வாழ்த்து தெரிவித்தார்.

admk neet sengottaiyan
இதையும் படியுங்கள்
Subscribe