Skip to main content

“தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்போம்” முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

Will support Tamil Nadu government in NEET issue former minister sengkottaiyan
                                               கோப்புப் படம்  

 

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஆக.13ஆம் தேதி காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். அதன்பின் சட்டமன்றத்தில் தொடர் மானிய கோரிக்கை விவாதங்கள் நடந்துவருகிறது. இந்நிலையில் நேற்று சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. 

 

இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “கடந்த 1967-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இரண்டு திராவிடக் கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. திராவிட மண்ணில் என்றும் வேறு கட்சிகள் நுழைய முடியாது. முந்தைய அதிமுக ஆட்சியில் பல நல்லதிட்டங்களை தந்துள்ளோம். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதைமனதில் வைத்து அங்கன்வாடிகளில் உள்ளபிள்ளைகளுக்காக, அருகே உள்ள பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு, அங்கு 46,691 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

 

கடந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 1.20 லட்சம் மாணவர்களும், இந்த ஆண்டு 3 லட்சம் மாணவர்களும் சேர்ந்துள்ளனர். மாணவர்கள் இடைநிற்றல் 0.75 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், கரோனா காரணமாக பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால், இடைநிற்றலை தடுக்கும் திட்டத்தில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இடைநிற்றலை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்களை வழங்கினார். 45 லட்சம் மடிக்கணினிகளும், 59.60 லட்சம் சைக்கிள்களும் அளிக்கப்பட்டன. 630-க்கும் அதிகமான பள்ளிகளில் ரூ.514 கோடியில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டன. அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தினரும் வியந்து பார்க்கும் வகையில் புதிய பாடத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இந்தப் பாடத் திட்டத்திலேயே இருந்தே அதிக கேள்விகள் கேட்கப்பட்டன. 

 

கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த அரசும் சிறப்பாக பணியாற்றி வருவதை காண முடிகிறது. நீட்தேர்வு மற்றும் இருமொழிக் கொள்கை விவகாரத்தில் அரசுக்கு அதிமுக துணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

செங்கோட்டையன் பேசிக் கொண்டிருந்தபோது, அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்து பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். அப்போது, செங்கோட்டையன் “தமிழக சட்டப் பேரவையில் 9 முறை உறுப்பினராக இருந்து வருகிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு பேரவை கண்ணியத்துடன் நடைபெற்று வருகிறது” என வாழ்த்து தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.