Skip to main content

எனது வெற்றியையும், தமது தோல்வியையும் ஒப்புக்கொண்டு ஸ்டாலின் அரசியலில் இருந்து விலகிக் கொள்வாரா? - அன்புமணி இராமதாஸ்

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

சென்னை - சேலம் இடையிலான 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தும் என்றும் அது தமிழக அரசின் கடமை என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். இது குறித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, உழவர்களின் நலன்களை காக்கும் வகையிலான முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மட்டுமின்றி பாராட்டத்தக்கதும் ஆகும்.

 

anbumani

 

மேலும் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்னை- சேலம் இடையிலான பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறதே என்று கேள்வி  எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘8 வழிச்சாலை அமையவுள்ள பகுதி தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதி ஆகும். புதிய சாலை அமைப்பதன் மூலம் அப்பகுதியில் தொழிற்துறையும், உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படும். அதனால் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் நாங்கள் நம்பினோம். ஆனால், அந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை’’ என்று கூறியுள்ளார். எட்டு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதால் பாதிக்கப்படும் விவசாயிகளின் உணர்வுகளை மதித்து இத்தகைய நிலைப்பாட்டை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

 

palanisamy

 

சென்னை- சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அத்திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இத்திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய 5 மாவட்ட மக்களை விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்தேன். அந்த வழக்கில் தான் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு முழுமையானத் தடை விதிப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், அந்த வழக்கில் எனது தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று கோரி கேவியட் மனுவையும் உச்சநீதிமன்றத்தில் எனது சார்பில் எனது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருக்கின்றனர்.
 

இத்தகைய சூழலில் தான் முதலமைச்சர் பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும். இதற்காக முதலமைச்சர் பழனிச்சாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவிப்பின் மூலம் 8 வழி பசுமைச்சாலைத் திட்டம் குறித்த அனைத்து அச்சங்களும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. பசுமைச்சாலை அமைக்கப்பட இருந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் வழக்கம்போல வேளாண்மைப் பணிகளை மேற்கொள்ள முடியும். பசுமைவழிச் சாலை மீண்டும் உயிர்பெற்றுவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு சற்றும் தேவையில்லை. 8 வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது 5 மாவட்ட உழவர்களையும் கொண்டாட்ட நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
 

மீண்டும், மீண்டும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இந்த உலகத்துக்கே உணவு படைக்கும் உழவர்கள் தான் எனது கடவுள் என்பது தான்; உழவர்களின் நலனை பாதிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்; இப்போது மட்டுமல்ல, இனி எந்தக் காலத்தில் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்காக போராட முதல் ஆளாக பாட்டாளி மக்கள் கட்சி களமிறங்கும் என்பதைத் தான். பா.ம.க. உழவர்களுக்கான கட்சி. தமிழக உழவர்களின் நலன்களை பாதுகாக்க பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பாடுபடும்.
 

தமிழக உழவர்களுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, சென்னை & சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வாங்கியதை தாங்கிக் கொள்ள முடியாத திமுக தலைவர் ஸ்டாலின், ‘‘சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்  தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என்ற உறுதிமொழியை முதல்வர் பழனிச்சாமியிடமிருந்து இந்த வழக்கைத் தொடர்ந்த அன்புமணி பெறுவாரா? அவ்வாறு பெற முடியாவிட்டால் அதிமுக கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகுமா?’’ என்று வினா எழுப்பியிருந்தார். இப்போது அதற்கு விடை கிடைத்து விட்டது.
 

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என்பதையும்  தாண்டி, உயர்நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தும் என்றே முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இப்போதாவது இந்த விஷயத்தில் எனது வெற்றியையும், தமது தோல்வியையும் ஒப்புக்கொண்டு ஸ்டாலின் அரசியலில் இருந்து விலகிக் கொள்வாரா? என்பதை தெரிவிக்க வேண்டும். 
 

சென்னை & சேலம் இடையிலான 8 வழிச்சாலை விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்பது தான் உண்மை. இதுதொடர்பாக 11.06.2018 அன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், ‘‘8 வழிச்சாலை போடுவது தவறு என்று கூறவில்லை. கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து பணியை துவக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்’’ என்று கூறினார். 
 

அதேநாளில் சட்டப்பேரவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘பசுமை வழிச் சாலை போன்ற திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை. அதை திராவிட முன்னேற்றக் கழகம் முழு மனதுடன் வரவேற்கிறது’’ என்று கூறினார். இதைவிட மோசமான துரோகத்தை உழவர்களுக்கு செய்ய முடியாது. இத்தகைய துரோகத்தைச் செய்த மு.க.ஸ்டாலினுக்கு இச்சிக்கல் குறித்து பேச தகுதியில்லை. அதுமட்டுமின்றி இதற்காக உழவர்களிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார். 

Next Story

“தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும்” முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
When the election comes PM Modi will love the people CM MK Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இதுவரை 10 மக்களவைத் தொகுதிகள் தேர்தல் பரப்புரை செய்துள்ளேன். நான் போகிற இடமெல்லாம் தி.மு.க. கூட்டணிக்கு அலை அலையாக மக்கள் ஆதரவு இருக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்தால் தி.மு.க. கூட்டணிக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதியாகிவிட்டது.

தாய் மற்றும் தந்தை போல் அரவணைப்போடு தமிழ்நாடு அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறுகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள். தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ. 1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் கூறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரு. 1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். மக்களின் பெரும் ஆதரவே திராவிட மாடல் சாதனையின் அடையாளம். மக்களிடம் மாபெரும் எழுச்சியைப் பார்க்கிறேன். திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காகத்தான். தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதிதான். 100 ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி உரிமை சட்டம் வரக்காரணம் நீதிக்கட்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.க. அரசு தட்டி பறிக்கிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்தது?. சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி மற்றும் மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டன. இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ. 1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28 சதவிதம் ஜி.எஸ்.டி. வரி விதித்த கட்சிதான் பாஜக. கொரோனாவிற்கு பின் பட்டாசு தொழில் நலிவடைந்த போது மத்திய பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என நாடகம் போடுகிறார் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி. ஆனால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் தனக்கு பிரச்சனை தராததால் அவரை எதிர்க்க வேண்டியதில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவுக்கொழுந்தாக பேசியுள்ளார். ஆளுநருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்னை இருக்கிறதா?. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார். அதனால், அவரை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கவில்லை என்றால் அவருக்கு சொரணை இல்லை என்று தான் பொருள்.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும் கேஸ் சிலிண்டர், டீசல் மற்றும் பெட்ரோல் விலையைக் குறைத்துவிடுவார். ஆனால் இதன் விலையை உயர்த்தியது யார்?. மகளிர் தினத்தன்று கேஸ் சிலிண்டர் விலையைக் குறைத்தார். எல்லாம் வருடமும்தான் மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் விலையைக் குறைத்ததில்லை. தேர்தல் வரும்போது தான் பிரதமர் மோடிக்கு கருனை வந்துவிடுகிறது. தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான குணம் அவருக்கு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி நடத்தும் நாடகம் ஆகும்.

சொன்னதை செஞ்சிட்டுதான் உங்கள் முன் தெம்போடு நிற்கிறேன். பேசுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி படிக்கக் கூடாது என பா.ஜ.க. கூறுகிறது. சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல பெரும்பான்மைக்கும் எதிரானது தான் பா.ஜ.க. அரசு. சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். பிரதமர் மோடி உறுதியளிக்கும் வாக்குறுதிக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி செய்தது என்ன. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவை படுகுழியில் தள்ளியது. இந்தியாவை மீட்க வேண்டும் அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினோம்” எனப் பேசினார்.