Skip to main content

புதுச்சேரி தமிழகத்துடன் இணைக்கப்படுமா..? பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் பதில்..!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

Will Puducherry be merged with Tamil Nadu ..? BJP Congress leaders answer ..!


புதுச்சேரி மாநில பா.ஜ.க சார்பில் ‘காண்போம் இனியொரு நல்லாட்சி, காங்கிரஸ் இல்லா புதுச்சேரி’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க மாநிலத் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன்ரெட்டி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

 

கிஷன் ரெட்டி, “பிரதமர் மோடியின் நல்லாட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக நாட்டில் பல மாநிலங்கள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், துரதிஷ்டவசமாக புதுச்சேரி வளர்ச்சி அடையாததற்கு இங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தான் காரணம். புதுச்சேரி மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கிய போதும், இங்குள்ள காங்கிரஸ் அரசு மக்களுக்கு அதனைக் கிடைக்காமல் தடுத்து வருகிறது. மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராமல் பல திட்டங்களை நிறைவேற்றவில்லை. 


புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கப் போவதாக நாராயணசாமி திரும்பத் திரும்ப ஒரு பொய்யைக் கூறி வருகிறார்.


 
புதுச்சேரி யூனியன் பிரதேசம் எந்த மாநிலத்துடனும் இணைக்கப்பட மாட்டாது. யூனியன் பிரதேசமாகவே தொடரும்” என்றார்.


இந்தப் பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநிலப் பொதுச் செயலாளர் ஏம்பலம் செல்வம், எம்.எல்.ஏக்கள் கே.ஜி.சங்கர், செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Will Puducherry be merged with Tamil Nadu ..? BJP Congress leaders answer ..!


இதனிடையே காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் சார்பில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான பிரச்சாரம் நேற்று தொடங்கியது. கனகசெட்டிக்குளம் பகுதியில் தொடங்கிய இந்தப் பிரச்சாரக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
 

இந்தப் பிரச்சாரக் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் நலத் திட்டங்களை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து முடக்கிவருகிறார். மாநில வளர்ச்சியைப் பற்றி அவருக்குத் துளியும் அக்கறை கிடையாது. புதுச்சேரியைத் தமிழகத்துடன் இணைக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறுகிறார். சட்டப்பேரவை உள்ள ஜம்மு காஷ்மீரை ஏன் யூனியன் பிரதேசமாக மாற்றினீர்கள்? பிரதமர் நரேந்திரமோடி எப்போது வேண்டுமானாலும் புதுச்சேரியை தமிழகத்துடன் இணைத்துவிடுவார். இதை மனதில்கொண்டு அனைவரும் மாநில மக்களின் உரிமைக்காகப் போராட வேண்டும்” என்றார்.

 

இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் மற்றும் வைத்திலிங்கம் எம்.பி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, அனந்தராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர்கள் ராஜாங்கம், முருகன், வி.சி.க முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், ம.தி.மு.க கபிரியேல் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Next Story

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Firing has taken place in polling station of Manipur Parliamentary Constituency

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  ஆனால் அதற்குள் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அடையாளம் தெரியாத நபரால் மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.