Skip to main content

பாஜக வேகத்தை தடுப்பாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.? - விருதுநகரில் மும்முனைப் போட்டி! 

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

Will KKSSR stop the BJP ?

 

திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. சீனிவாசனும், பாஜக வேட்பாளராக பாண்டுரங்கனும், அமமுக வேட்பாளராக கோகுலம் தங்கராஜுவும் களமிறங்கியிருப்பது, ‘விருதுநகரில் மும்முனைப் போட்டி’ எனப் பேச வைத்துள்ளது.

 

Will KKSSR stop the BJP ?


கரோனா காலக்கட்டத்தில் தொகுதி முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தங்கராஜுவின் இலக்கு ‘மனைவிக்கு சேர்மன் சீட்’ என்ற அளவிலேயே இருந்தது. அதுவே, நாளடைவில் எம்.எல்.ஏ. கனவாக விரிந்தது. அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில், அமமுக பக்கம் தாவியவருக்கு, உடனே சீட் தந்தனர். ‘நான் செய்த நல்லதெல்லாம் வாக்குகளாக எனக்கே திரும்பிவரும்’ என்பது தங்கராஜுவின் நம்பிக்கையாக இருக்கிறது.

 

திமுக தரப்பிலோ “தான் ஒரு கிறிஸ்தவ நாடார் என்பதாலும், தேவாலயங்களுக்கும் மசூதிகளுக்கும் உதவிக்கரம் நீட்டியதாலும், சிறுபான்மையினர் வாக்குகளில் கணிசமானவை குக்கர் சின்னத்தில் விழும் என்று தங்கராஜ் நினைக்கிறார். ‘போட்டியிடுவது பாஜக. அதனை வீழ்த்த வேண்டுமென்றால் ஒட்டுமொத்த வாக்குகளும் திமுக வேட்பாளருக்கே போக வேண்டும். கைம்மாறு செய்வதாக குக்கருக்கு ஆதரவளிப்பது, நாட்டுக்கு நல்லதல்ல..’ என்பதில் சிறுபான்மையினர் தெளிவாக இருக்கிறார்கள். ஒருக்காலும் திமுக வாக்கு வங்கிக்கு, அமமுக வேட்பாளரால் சேதம் இருக்காது” என்கிறார்கள். 

 

Will KKSSR stop the BJP ?

 

இளைஞரான பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன், தேர்தல் களத்துக்குப் புதியவர். ரூ. 4 கோடி வரை செலவழிப்பேன் என்று சொல்லித்தான் சீட் வாங்கினார் என தாமரை தரப்பில் சொல்கின்றனர். திமுக வேட்பாளரைக் காட்டிலும் ஓட்டுக்கு அதிகமாக பணம் தருவார் என்பதே, இவரது பலமாகப் பார்க்கப்படுகிறது. திமுக வாக்குகளை தங்கராஜ் பிரித்தால், வெற்றி கைகூடும் என்றொரு கணக்கு பாஜகவுக்கு இருக்கிறது. எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் ‘ஓட்டுக்குப் பணம்’ வாக்காளர்களைச் சென்றடையும் என்பதால், ‘தாமரை மலரக்கூடும்’ என விருதுநகர் தொகுதியைப் பேச வைத்திருக்கிறது.

 

திராவிட கொள்கைகளில் பிடிமானம் உள்ள சுப்பையா, “விருதுநகர் மாவட்டத்துக்கு வந்த கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி, ‘தமிழர்களின் அபாயம் பாஜக’ என்கிறார். விருதுநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வசிக்கும்போது, பாஜக வேட்பாளரால் எப்படி வெற்றி பெறமுடியும்? விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசுதான் என்று அவரால் தட்டிக்கழிக்க முடியாது. தனது அரசியல் அனுபவத்தால் ‘வியூகம்’ அமைத்து, தனது விசுவாசியான ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனை வெற்றிபெற வைப்பதுதானே அண்ணாச்சியின் இலக்காக இருக்கமுடியும்?” என்று கேட்கிறார்.

 

வாக்குகளுக்காக தங்கராஜ் தரும் பணம், முழுமையாக வாக்காளர்களைச் சென்றடையாது என்பதை, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அமமுக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் பட்ட அனுபவத்தை வைத்தே கணிக்கின்றனர். அதிமுக வாக்கு வங்கியில் மட்டுமே சேதாரம் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் வீசுவதாகச் சொல்லப்படும் திமுக அலையில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசனும் கரையேறுவார் என்பது திமுகவினரின் நம்பிக்கையாக உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.