Skip to main content

நீட் தேர்வு  ரத்து செய்யப்படுமா? தமிழக மாணவர்களின் எதிர்பார்ப்பு !

Published on 11/05/2021 | Edited on 11/05/2021

 

Will DMK talk about neet exam cancelation in assembly

 

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து முதல்வராகியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். திமுகவின் தேர்தல் அறிக்கையில் தந்துள்ள உறுதிமொழிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

திமுக அறிவித்த தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமானது, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பது. இந்த நிலையில், கலைவாணர் அரங்கில் இன்று (11.05.2021) காலையில் சட்டமன்றம் கூடுகிறது. தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி.  

 

சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோருக்கான தேர்தல் நாளை (12.5.2021) நடக்கிறது. இந்த இரு பதவிகளுக்கும் போட்டியிருக்காது என்பதால், திமுக நிறுத்தியுள்ள அப்பாவு, பிச்சாண்டி இருவரும் முறையே சபாநாயகராகவும் துணை சபாநாயகரகாவும் தேர்வு செய்யப்படுவார்கள். 

 

இந்த இரண்டு நாள் நிகழ்வுகளுக்குப் பிறகு சட்டமன்றம் ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது. அதேசமயம், நடப்பாண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது. அதனால், 2021 - 22க்கான முழு பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூன்) தாக்கல் செய்ய ஸ்டாலின் அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கான பணிகளில் கவனம் செலுத்திவருகிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். 

 

நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்திருக்கிறார். இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட மசோதா நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. 

 

அதேசமயம், நடப்பு கல்வியாண்டிலேயே நீட் தேர்வு நீக்கப்பட முதல்வர் ஸ்டாலின் முயற்சித்து வெற்றிகாண வேண்டும் என்பது மருத்துவப் படிப்பு கனவில் இருக்கும் தமிழக மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.