Advertisment

நீரவ் மோடி விவகாரத்தில் மோடியின் மவுனம்? ட்விட்டரில் கலாய்க்கும் சித்தராமையா!

நீரவ் மோடி ஓட்டத்திற்கு இந்திராகாந்திதான் காரணம் என மோடி நினைத்துக் கொண்டிருப்பதாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Advertisment

கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. பிரதான கட்சிகளாக தேர்தலைச் சந்திக்க இருக்கின்றன. இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடவேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் தனது பிரச்சாரங்களின் போது கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள சித்தராமையா, ‘மோடி பிரதமராக நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார்’ என தெரிவித்தார்.

இந்நிலையில், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீரவ் மோடி ஊழல் விவகாரத்தில் வங்கி ஊழியர்களையும், ஆடிட்டர்களையும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டுகிறார். எடியூரப்பா என் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். ஒருவேளை அவர் வங்கிகளை தேசிய மயமாக்கிய இந்திராகாந்தியையும், பஞ்சாப் நேஷனல் வங்கியை உருவாக்கிய லாலா லஜபதி ராயையும் குற்றவாளிகள் எனச் சொல்லலாம் என நினைத்துக் கொண்டிருக்கலாம்.. மற்றவர்களின் மீது குற்றஞ்சாட்டிவிட்டு அவர்களாகவே வந்து நிற்பதெல்லாம் மிகப்பெரிய மந்திரம்!’ என சித்தராமையா கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

Karnataka Government modi Siddaramaiah
இதையும் படியுங்கள்
Subscribe