கடந்த 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ஒரு நிகழ்ச்சியை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசு நடத்தியது. கவர்னர் மற்றும் மாநில தேர்தல் அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த விழாவில் பேசிய தலைமைச் செயலாளர் சண்முகம், சில கட்சிகள் அரசியல் லாபங்களுக்காக சாதி, மதங்களைப் பயன்படுத்துவது அபாயகரமானது என்று கூறினார். ஆளும் கட்சிக் கூட்டணியில் இருக்கும் பா.ம.க.வைத்தான் அவர் குறிப்பிடறார் என்று மற்ற அதிகாரிகள் திகைத்து நின்றார்கள்.

pmk

Advertisment

அடுத்ததாக அவர், தற்போது அதிகாரத்துக்கு வருவதற்காக அரசியல் கட்சிகள் விளம்பர யுத்தியைப் பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசியல் ஆலோசகர்கள் என்று சிலர் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு அதன் தொண்டர்களும் நிர்வாகிகளும் தெரிவிக்காத விஷயங்களையா ஆலோசகர்கள் சொல்லிவிடப் போகிறார்கள்? மக்களுக்கு என்ன தேவை என்று அந்தக் கட்சிகள் மக்களிடமே போய்க் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இதற்கு ஆலோசகர் தேவையா?’ என்று அதிரடியாக கூறினார். அண்மையில் தி.மு.க., தனது அரசியல் ஆலோசகராக, அரசியல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரை நியமித்ததையே தலைமைச் செயலாளர் இப்படிக் கிண்டல் செய்கிறார் என்று ஏனைய அதிகாரிகள் விறுவிறுப்பாக தகவல்களைப் பகிர்ந்துக்கிட்டதோடு, தலைமைச் செயலாளர் எதற்கு அரசியல் பேச வேண்டும் என்று தங்களுக்குள் விவாதிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.