Skip to main content

''இதனால்தான் தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று அண்ணா சொன்னார்''-மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 25/01/2022 | Edited on 26/01/2022

 

That is why Anna said that Hindi has no place in Tamil Nadu '' - MK Stalin's speech!

 

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், திமுக மாணவரணி சார்பில் வீர வணக்க நாள் கூட்டம் இன்று தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  ''தாளமுத்து நடராஜன் என்ற பெயரில் மாபெரும் மாளிகையை எழும்பூரில் அமைத்து பெருமை சேர்த்தார் கலைஞர். 1938-ல் தொடங்கிய போராட்டம் 1940-ஆம் ஆண்டு இந்தி கட்டாயம் இல்லை என அறிவிக்கப்படும் வரைக்கும் நடைபெற்றது. 1948 ஆம் ஆண்டு மீண்டும் இந்தி திணிக்கப்பட்டது. அப்போதும் பெரியாரும், அண்ணாவும் போர்ப்பரணி பாடினார்கள். இரண்டு ஆண்டுகாலம் அந்த போராட்டம் நடந்தது. 1963ஆம் ஆண்டு மீண்டும் இந்தி ஆதிக்கம் தலைவிரித்தாடியது. அண்ணாவும், கலைஞரும் அமைத்த போர்க்களம் என்பது இரண்டு ஆண்டுகாலம் தமிழகத்தில் நீடித்தது.

 

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினரும் பங்கெடுத்து சிறை சென்றார்கள். ஆறு மாதம் முதல் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகள் வரை சிறையில் வாடினார்கள். மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கைதான திமுகவினர் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்கள். காஞ்சி, குமரி, கோவை, சென்னை ஆகிய ஊர்களில் கைதானவர்கள் 6 மாத கால சிறை தண்டனை பெற்றார்கள். மற்ற மாவட்டங்களில் கைதானவர்கள் 3 மாதம் முதல் 6 மாதம் வரை தண்டனை பெற்றார்கள். திமுக முன்னணி செயல் வீரர்கள் அனைவரும் சிறைப்பட்டார்கள். இதுதான் தமிழ்நாட்டினுடைய மொழி போராட்டத்தின் வரலாறு. இந்த இரண்டு ஆண்டுகால எழுச்சிதான் 1965 ஆம் ஆண்டு மாணவர் சமுதாயத்தை மாபெரும் கிளர்ச்சிக்கு தயாராக்கியது. தங்களது உடலில் தாங்களே தீ வைத்து கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, சாரங்கபாணி போன்றோரும், அமுதம் அருந்துவது போல விஷமருந்தி மறைந்த தண்டாயுதபாணி, முத்து, விராலிமலை சண்முகம் போன்றோரும் மொழிக்காக தங்கள் உயிரையே தந்தார்கள். இன்றைக்கு படங்களாக இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள். மொழி போர்க்களத்தின் முதல் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி. இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டன். தனது மகளுக்கு திராவிடச் செல்வி என்று பெயர் சூட்டி இருந்தார் சின்னச்சாமி.

 

சென்னை கோடம்பாக்கத்தில் தீக்குளித்த சிவலிங்கம் அவருடைய வயது 21. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டராக நுங்கம்பாக்கம் பகுதி கழகத்தின் பொருளாளராக இருந்து பணியாற்றி இருக்கிறார். தீக்குளித்த விருகம்பாக்கம் அரங்கநாதன் ஒன்றிய அரசினுடைய தொலைப்பேசி துறையில் ஊழியராக பணியாற்றியவர் அவரும் திமுகவின் தொண்டர் தான். சத்தியமங்கலம் முத்து என்கின்ற திமுக தொண்டர் தீக்குளித்தார். அவருக்கு வயது 22.  ஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் தீக்குளித்தார். அவரும் திமுகவைச் சார்ந்தவர் தான். 22 வயதான விராலிமலை சண்முகம் திமுகவின் தொண்டர். திருச்சி பாலக்கரையில் 16 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்துக்கு கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவாக சின்னசாமி-சண்முகம் பாலம் என்று பெயர் சூட்டினார் கலைஞர்.

 

மொழிப்போர் தியாகிகளால் தமிழினம் மேன்மை அடைந்துள்ளது. மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்தவர் கலைஞர். அதனால்தான் 1967ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் அத்தகைய உணர்வோடு அண்ணா அதற்காகவே இந்த ஆட்சியை நடத்திக் காட்டினார். மாணவர்களின் தாகத்தை மதிக்கக் கூடிய வகையில் இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்றும் அண்ணா அறிவித்தார். 'தமிழும்-ஆங்கிலமும்' என்ற இரு மொழிக் கொள்கையைச் சட்டமாக்கினார் அண்ணா'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.